Published : 15 Jun 2022 02:53 PM
Last Updated : 15 Jun 2022 02:53 PM

'ஆனால் விதை நான் போட்டது' - ஐபிஎல்லின் அபார வளர்ச்சி குறித்து லலித் மோடி ரியாக்‌ஷன்

புது டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அபார வளர்ச்சி கண்டுள்ள இந்த வேளையில் அதற்கான விதையைப் போட்டது தானே என தெரிவித்துள்ளார் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி. ட்வீட் மூலம் இதனை தெரிவித்துள்ளார் அவர்.

2023 முதல் 2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி, டிஜிட்டல், பிரத்யேக போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்திற்கான ஏலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் ரூ.23,758 கோடிக்கும் பெற்றுள்ளன. இது தவிர வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் ரூ.1,057 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கான ஒட்டுமொத்த விலை ரூ.48,390 கோடி. மலைக்க வைக்கும் இந்த விலையை குறித்து அறிந்தவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

இதன் மூலம் உலகில் அதிக மதிப்புமிக்க விளையாட்டுத் தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது ஐபிஎல். முதலிடத்திட்டத்தில் அமெரிக்காவின் NFL உள்ளது. இந்நிலையில், முதன் முதலில் கடந்த 2007 வாக்கில் ஐபிஎல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட லலித் மோடி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

"என் பெயரை உச்சரிக்கக் கூட தடை விதித்துள்ளார்கள். எந்த வர்ணனையிலும் அது குறித்த பேச்சு கூட இல்லை. ஐபிஎல் கிரிக்கெட்டை நிறுவியதில் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என்பதால் அவர்கள் கொண்டுள்ள பயத்தின் வெளிப்பாடு இது. ஆனால் இதில் காய்க்கும் பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அற்பமான மனப்போக்கை கொண்டவர்கள். ஆனால் அவர்களால் ஐபிஎல் கிரிக்கெட்டை நிறுவியவன் நான் என்ற உண்மையை எடுத்துக் கொள்ள முடியாது. எனக்கு அது போதும்" எனத் தெரிவித்துள்ளார் லலித் மோடி. 2008 முதல் 2010 வரையில் ஐபிஎல் தலைவராக இயங்கியவர் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x