IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு

IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்து அசத்தியுள்ளனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அந்த அணி இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தொடரில் மேலும் ஒரு போட்டியில் வெற்றியை பதிவு செய்வதன் மூலம் அந்த அணி தொடரையும் வெல்லும்.

இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ், 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்தார். அவர் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பின்னர் வந்த ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இருந்தாலும் ஹர்திக் பாண்டியா, 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது இந்தியா.

தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற 180 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணியில் பவுமா, கிளாசன், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அபாரமான பேட்டிங் ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in