333 போட்டிகள், 10868 ரன்கள்; 23 ஆண்டுகள் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!

333 போட்டிகள், 10868 ரன்கள்; 23 ஆண்டுகள் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868 ரன்கள் எடுத்துள்ளார் அவர். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2017 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் மிதாலி. மொத்தம் 7805 ரன்கள் குவித்துள்ளார்.

இதே ஜூன் மாதத்தில் கடந்த 1999 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீராங்கனையாக களம் கண்டார் மிதாலி. அப்போது அவருக்கு 16 வயது. அன்று முதல் இந்திய அணிக்காக மும்முரமாக ரன் குவித்து வந்தார். சீனியர் வீராங்கனையாக அணியை திறம்பட வழிநடத்தி வந்தார். இப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்த தனது அறிவிப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம், சக வீராங்கனைகள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் மிதாலி. அவரது ஓய்வு முடிவை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு விடை கொடுத்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in