

மும்பை: “நம் அணிக்கு ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அவுட்டாகி விடுவார்கள்” என இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித், கோலி மற்றும் கே.எல்.ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் முதல் இந்த ஆண்டு இறுதி வரையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்து போட்டிகளும் இதில் அடங்கும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித், கோலி மற்றும் பும்ரா போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. முழுவதும் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் களம் இறங்குகிறது இந்தியா.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
"அவர்கள் தரமான ஆட்டக்காரர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். கிரிக்கெட் விளையாட்டை அச்சமில்லாமல் விளையாட வேண்டும். இந்த வீரர்கள் 150-160 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிப்பவர்கள். எப்போதெல்லாம் அணிக்கு ரன்கள் தேவைப்படுகிறதோ அப்போது அவர்கள் அவுட்டாகி விடுவார்கள்.
ஒரே இன்னிங்ஸை முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரம் பார்த்து அவுட்டாகி விடுவார்கள். அது அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. ஒன்று நீங்கள் ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இல்லையென்றால் அடித்து ஆட வேண்டும். பெரிய வீரர் என்ற பெயர் மட்டும் போதாது. தரமான, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார் கபில் தேவ்.