உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 64 ஆண்டுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 64 ஆண்டுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி
Updated on
1 min read

கார்டிப்: உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் பிளே ஆஃப் ஆட்டத்தில் உக்ரைனை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது வேல்ஸ் அணி. அந்த அணி 64 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தாரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்றின் பிளே ஆஃப் ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் – உக்ரைன் அணிகள் நேற்று முன்தினம் வேல்ஸில் உள்ள கார்டிப் நகரில் மோதின. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் கரேத் பாலே அடித்த ஃப்ரீகிக்கை, உக்ரைன் வீரர் ஆண்ட்ரி யர்மோலென்கோ தலையால் தட்டிவிட முயன்றார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அது சுய கோலாக மாறியது. இதனால் வேல்ஸ் அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. உக்ரைன் அணி கடைசி வரை போராடிய போதிலும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் வேல்ஸ் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசியாக 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தது. தற்போது 64 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in