

திருவள்ளூர்: பள்ளி மற்றும் மாவட்ட அணிகளுக்காக தான் விளையாடாமல் போயிருந்தால் இந்திய அணிக்காக தன்னால் விளையாடி இருக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வில் தோனி கலந்து கொண்டார். அப்போது பள்ளி மற்றும் மாவட்ட அணிக்காக விளையாடுவதன் அவசியம் குறித்து விரிவாக பேசி இருந்தார் அவர். ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அணிக்காக மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடி இருந்தார் தோனி. அதன் மூலம் பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநில அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து மண்டல அளவில் சாதித்து இந்திய அணியில் இடம் பிடித்தார். அதன் பிறகு அனைத்தும் வரலாறாக மாறியது.
"இந்த நேரத்தில் ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் விளையாடும் மாவட்ட அணி குறித்து முதலில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக நான் விளையாடியதில் எனக்கு பெருமை. ஆனால் நான் பள்ளி மற்றும் மாவட்ட அணிக்களுக்காக விளையாடாமல் போயிருந்தால் அது நடந்திருக்காது. அதனால் அந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம்தான்.
மாவட்ட கிரிக்கெட் விளையாடும் போது நமக்குள் ஓர் உந்து சக்தி இருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் உங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி செல்லும். இந்தச் சங்கத்தின் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார் தோனி.