

சென்னை: கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்
இந்த விழாவில் சிறைப்புரையாற்றிய ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, “கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, சதுரங்கத்தில் சிகரம் தொட்டதற்காக பாராட்டி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விளையாட்டு நட்சத்திரம் ஆகி உள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். வருங்காலத்தில் அவர் உலகின் முதல் நிலை சதுரங்க ஆட்டக்காரராக மிளிர வேண்டும் என்கிற கனவு நனவாக அவருடைய அனைத்து முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்.
தற்போது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய சதுரங்க ஆட்டத்தில் மற்றும் பிற விளையாட்டுகளில் சாதிக்க விரும்பும் இளையோருக்கு முன்மாதிரியாக விளங்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தங்கள் உறுப்பினர் ஆக்கியதில் இந்தியன் ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது.
இந்தியாவில் விளையாட்டு துறையில் உச்சத்தை தொடும் குறிக்கோள் கொண்ட தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாட்டின் பலதரப்பட்ட விளையாட்டுகளை சார்ந்த உலக சாம்பியன்களை உருவாக ஏதுவாக, கடந்த 30 ஆண்டுகளாக இளம் விளையாட்டு திறமையாளர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனம், நாடெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது. வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஸ்காலர்ஷிப் வழங்குவதுடன் அவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நிறுவனம் நடத்தி வருகிறது. சமூகப் பொறுப்புணர்வு பணிகள் (CSR) மூலமாக, விளையாட்டுகளை ஊக்குவிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ள செயல்களுக்காக, இந்தியன்ஆயில் நிறுவனத்திற்கு "ராஷ்ட்ரீய ப்ரோத்சாஹன் புரஸ்கார்" வழங்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மிக்க நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம், 19 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினரை கண்டெடுத்து ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்கள் வருங்காலத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஆக திகழ ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. சதுரங்க சாம்பியனை வரவேற்பதிலும் அவரது சாதனையை அங்கீகரிப்பதிலும் இந்தியன் ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.