Published : 26 May 2022 09:04 PM
Last Updated : 26 May 2022 09:04 PM

ஆசிய ஹாக்கி கோப்பை 2022 | இந்தோனேசியாவை 16-0 கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா; கார்த்தி 2 கோல்கள் பதிவு

ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்கள்.

ஜகார்த்தா: நடப்பு ஆண்டுக்கான ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது இந்தியா.

இந்தோனேசிய நாட்டில் கடந்த திங்களன்று ஆடவர் ஆசிய ஹாக்கி தொடர் - 2022 தொடங்கியது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. இந்தப் பிரிவில் ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகளும் இருந்தன. மூன்று போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது இந்தியா. இறுதியில் கோல்கள் பதிவு செய்த வித்தியாசத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

15 கோல்கள் தேவை: இந்திய அணி குரூப் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தது. ஜப்பான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி இந்தோனேசியாவை 13-0 என வீழ்த்தி இருந்தது. இருந்தும் ஜப்பானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை இழந்தது. அதனால் இந்தியா அடுத்தச் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தோனேசியாவை 15-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்துவது அவசியமாக இருந்தது. அப்போதுதான் கோல்களின் அடிப்படையில் பாகிஸ்தானை முந்த முடியும் என்ற நிலை.

இத்தகைய நெருக்கடியான சூழலில் விளையாடிய இந்திய அணி, இந்தோனேசியாவிற்கு எதிராக 16-0 என்ற கணக்கில் கோல்களை பதிவு செய்து மிகச் சுலபமாக வெற்றி பெற்றது. அதன் பலனாக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

இந்திய அணிக்காக இந்தோனேசிய அணிக்கு எதிராக டிர்கி - 4, சுதேவ் பெலிமக்கா - 3, தமிழகத்தை சேர்ந்த கார்த்தி, சுனில் மற்றும் ராஜ்பார் தலா 2 கோல்களும், உத்தம் சிங், நிலம் சஞ்ஜீப் மற்றும் லாக்ரா தலா ஒரு கோலும் பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x