Published : 25 May 2022 10:44 PM
Last Updated : 25 May 2022 10:44 PM

IPL 2022 Eliminator | லக்னோவை துவம்சம் செய்த பட்டிதார்; பெங்களூரு 207 ரன்கள் குவிப்பு

பெங்களூரு வீரர் ரஜத் பட்டிதார்.

கொல்கத்தா: நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார் பெங்களூரு வீரர் ரஜத் பட்டிதார் (Rajat Patidar). இந்த போட்டியில் அவர் சதம் பதிவு செய்துள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டூப்ளசி, ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து பேட் செய்ய வந்த ரஜத் பட்டிதார், கோலியுடன் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். கோலி, 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் லோம்ரோரும் நீண்ட நேரம் கிரீஸில் நிலைக்கவில்லை. 115 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்திருந்தது பெங்களூரு.

களத்தில் ஒற்றை ஆளாக போராடிக் கொண்டிருந்த பட்டிதார் உடன் கூட்டு சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இருவரும் 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்டிதார், 54 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தார். ஐபிஎல் அரங்கில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் (Uncapped Player) பதிவு செய்த சதங்களின் வரிசையில் இது நான்காவது சதம். ஆர்சிபி அணிக்காக பிளே-ஆஃப் சுற்றில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர், ஐபிஎல் வரலாற்றின் பிளே-ஆஃப் சுற்றில் சதம் பதிவு செய்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார். தினேஷ் கார்த்திக், 23 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களை எடுத்தது பெங்களூரு. இப்போது 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டுகிறது. மழை குறுக்கீடு காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x