Published : 24 May 2022 11:37 PM
Last Updated : 24 May 2022 11:37 PM

IPL 2022 Qualifier 1 | எடுபடாத ராஜஸ்தான் பந்துவீச்சு - முதல் அணியாக பைனலுக்கு நுழைந்த குஜராத்

ஈடன்கார்டன்: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு நுழைந்துள்ளது.

189 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் விருத்திமான் சஹா. இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்த மேத்யூ வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தனர். 10 ரன்கள் ரேட்டில் இருவரும் ரன்கள் சேர்த்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கில் ரன் அவுட் மூலம் 35 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மேத்யூ வாடும் 35 ரன்களுக்கு நடையை கட்டினார்.

அடுத்தடுத்து இரண்டு சரிவுகளை சந்தித்தாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் டேவிட் மில்லர். இருவரும் அதிரடியாக ஆடி, விரைவாக ரன்களை சேர்த்தனர். இறுதி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ஏற்கனவே அரைசதம் கடந்திருந்த டேவிட் மில்லர் பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி பைனலுக்கு நுழைந்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்லர் 68 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்திருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட் மற்றும் மெக்காய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பவுலிங் தேர்வு செய்தார். அதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து களத்திற்கு பேட் செய்ய வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். படிக்கல் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுபக்கம் விளையாடிக் கொண்டிருந்த பட்லர் மிகவும் நிதானமாக விளையாடி வந்தார். 15 ஓவர்கள் முடிவில் 35 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்திருந்தார் அவர். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் தனது ஆட்டத்தில் அப்படியே வேகத்தை கூட்டினார். டெத் ஓவர்களில் மட்டும் அவர் எதிர்கொண்ட 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜஸ்தான் இன்னிங்ஸில் ஒரே ஒரு பந்து எஞ்சியிருக்க ரன் அவுட்டானார்.மொத்தம் 56 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்தார் அவர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஷமி, யாஷ் தயால், சாய் கிஷோர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது குஜராத். இந்த சேஸிங் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராஜஸ்தான் இரண்டாவதாக பவுலிங் செய்து ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் கலையில் கைதேர்ந்த அணி. அதற்கு காரணம் அந்த அணியின் பவுலிங் யூனிட். அதே நேரத்தில் குஜராத் சேஸிங்கில் கைதேர்ந்த அணியாகும். மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணி அது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x