

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் குறைவாக இருப்பதால், இந்த டெஸ்ட் தொடர் சவாலானதாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
தோனி கூறியதாவது: "இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் தொடர் தோல்வி காரணமாக இங்கிலாந்து அணி சற்று சோர்வுற்றிருந்தாலும், சொந்த மண்னில் விளையாடுவதால் அவர்களுக்கு மைதானத்தின் தன்மை நன்கு தெரியும். அது அவர்களுக்கு சாதகமாக அமையும்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறோம். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், ஒரு டி.20 போட்டி என்பது நிச்சயம் மிகப்பெரிய போராட்டமாகத்தான் இருக்கும்.
அண்மைக்கால தோல்விகளை வைத்து இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. தொடர் தோல்வி காரணமாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார் அலிஸ்டெர் குக். ஆனால், அவரது சமீபத்திய சறுக்கல்களை வைத்து அவரது திறனை மதிப்பிடக் கூடாது. அவரது ரெக்கார்டை பார்த்தால் தெரியும் அவர் எவ்வளவு சிறப்பான வீரர் என்பது.
பொதுவாக எல்லா வீரர்களும் அவ்வப்போது சிறு சறுக்கல்களை சந்திக்க நேரும். ஒரு வீரர் சதம் அடிக்கும் போது ஊடகங்கள் அவர் பக்கம் நிற்கும். ஆனால், அதே வீரருக்கு சறுக்கல் ஏற்படும் போதும் அவருக்கு ஆதரவாக அணியினரும், ரசிகர்களும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்.
கேப்டன் பதவி என்பது ஒரு தொடர்நிகழ்வு. ஒவ்வொரு முறை நான் விளையாடச் செல்லும்போதும் நான் ஒரு நல்ல கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கேப்டன் மற்ற வீரர்களின் நன் மதிப்பை பெற வேண்டும். ஆனால் அது வலுக்கட்டாயமாக பெற்றதாக இருக்கக் கூடாது. இயல்பாக நடக்க வேண்டும்.
டிரெஸ்ஸிங் அறையில் சுமுகமான, இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும். இறுக்கமான செயல்பாடு, சந்தேகக் கண் எதற்கும் உதாவது." இவ்வாறு அவர் கூறினார்.