Published : 12 May 2022 04:03 PM
Last Updated : 12 May 2022 04:03 PM

IPL 2022 | நான் கிரிக்கெட் விளையாட காரணமே அப்பா தான் - மும்பை வீரர் குமார் கார்த்திகேயா

குமார் கார்த்திகேயா சிங்.

மும்பை: "நான் கிரிக்கெட் விளையாட காரணமே அப்பா தான்" என தெரிவித்துள்ளார் இளம் வீரர் குமார் கார்த்திகேயா சிங். இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் களத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இருந்தாலும் இந்த சீசன் மும்பைக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது அந்த அணி. இந்நிலையில், காயம்பட்ட வீரருக்கு மாற்றாக அண்மையில் அணியில் இணைந்தவர் தான் 24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா சிங். இதுவரை நடப்பு சீசனில் மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். அதன் மூலம் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இத்தகைய சூழலில் தனது கதையை பகிர்ந்துள்ளார் அவர். "நான் சிறுவனாக இருக்கும் போது ஒருநாள் என் அப்பா ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை கவனித்தேன். அவர் அதிகம் முன் கோபம் கொள்வார். ஆனால் அவர் கிரிக்கெட் பார்ப்பதை பார்த்து நானும் கிரிக்கெட் விளையாட வேண்டுமென முடிவு செய்தேன். அப்பாவின் சந்தோஷத்திற்காக எடுத்த முடிவு அது. எனக்கு அதுவரையில் கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாது.

முறையான பயிற்சிக்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இணைந்தேன். அங்கிருந்து பயிற்சிக்காக டெல்லிக்கு வந்தேன். பின்னர் மத்திய பிரதேசம் சென்றேன். இப்போது அந்த மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். நான் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் செய்தியை அப்பாவிடம் சொன்னேன். அதை கேட்டு அவர் சந்தோஷம் கொண்டார். இருந்தாலும் அதை அவர் வெளிக்காட்டவில்லை. அப்படியே மும்பை அணியில் நெட் பவுலராக இணைந்தேன்.

மும்பை அணியில் உள்ள சீனியர் வீரர்கள், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர்கள் என அனைவரும் தயக்கம் இல்லாமல் பந்துவீசுமாறு தெரிவித்தார்கள். அதை இப்போது செய்து வருகிறேன். நான் மும்பை அணிக்காக விளையாடிய முதல் போட்டியை அப்பா வேலை செய்து வரும் போலீஸ் பட்டாலியனில் உள்ள அனைவரும் பெரிய புரொஜக்டர் மூலம் பார்த்து ரசித்துள்ளனர். நான் விக்கெட் வீழ்த்திய போது கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை இப்போதுதான் நான் பார்த்தேன். அப்பாவை சந்தோஷப்படுத்தியதில் எனக்கு சந்தோஷம்" என தெரிவித்துள்ளார்.

மும்பை அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x