Published : 09 May 2022 11:25 PM
Last Updated : 09 May 2022 11:25 PM

IPL 2022 | வீணான பும்ராவின் அதிரடி ஸ்பெல்... மும்பையை வீழ்த்தி பிளே ஆப் போராட்டத்தில் நீடிக்கும் கொல்கத்தா

ஐபிஎல் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஓப்பனிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு இம்முறை அதிரடி துவக்கம் கொடுத்தார் வெங்கடேஷ் ஐயர். மும்பை அணியின் பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர், 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதேபோல் நிதிஷ் ராணா 43 ரன்கள் எடுத்தார். ஓப்பனிங்கும், ஒன்டவுன் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஆர்டரும் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா கொல்கத்தா பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் ஆக்கினார்.

18வது ஓவரில் மட்டும் 3 விக்கெட்களை வீழ்த்திய அவரால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பும்ரா ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே இரண்டு ரன்களோடு நடையை கட்டினார். டிம் சவுத்தி ஓவரில் அவர் அவுட் ஆகி அணியின் சரிவை தொடங்கி வைத்தார். மறுபுறம் இருந்த இஷான் கிஷன் பொறுப்பாகா ஆடி அரைசதம் கடந்தாலும், மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து மும்பை வீரர்கள் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறினார்.

இதனால் 17.3 ஓவர்களிலேயே மும்பை அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி கண்டது. கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்களும், ரஸ்ஸல் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். 53 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இந்தப் போட்டி வாழ்வா சாவா போராட்டமாக இருந்தது. எனினும், வெற்றிபெற்று பிளே ஆப் போட்டிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x