Published : 09 May 2022 01:42 AM
Last Updated : 09 May 2022 01:42 AM

IPL 2022 | 'நான் கணக்கில் புலி அல்ல' - பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி

மகேந்திர சிங் தோனி.

மும்பை: 'நான் கணக்கில் புலி அல்ல', தங்கள் அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இப்படி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 லீக் போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இப்போது சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லோரது கேள்வியும் ஒன்றாக தான் உள்ளது. அது சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்பதுதான். அதுவும் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ள நிலையில் இந்த கேள்வி அதிகம் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து அந்த அணியின் கேப்டன் தோனி தனது கருத்தை சொல்லியுள்ளார்.

''இப்போதைக்கு நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்த விரும்புகிறோம். அது தான் இப்போதைக்கு தேவை. அது நல்லதும் கூட. நான் கணக்கு பாடத்தை பெரிதாக விரும்புபவன் அல்ல. பள்ளி படிக்கின்ற நாளில் இருந்தே நான் இப்படி தான். நான் கணக்கில் புலி அல்ல.

நெட் ரன் ரேட் குறித்து சிந்திப்பது உதவாது. ஐபிஎல்லை அனுபவித்து விளையாட வேண்டும். அதை விடுத்து பிற அணிகள் விளையாடும் போது அதனை எண்ணி அழுத்தம் கொள்ள வேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன். நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் சிறப்பு. ஆனால் நாங்கள் முன்னேறவில்லை என்றால் அது எங்களது முடிவும் அல்ல" என தோனி தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

புள்ளிப் பட்டியலில் சென்னை அணி எட்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் மேலும் மூன்று போட்டிகளில் சென்னை விளையாட உள்ளது. அந்த மூன்றிலும் சென்னை வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற சில அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை சார்ந்தே சென்னை அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது. முக்கியமாக பெரிய அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x