Published : 05 May 2022 06:55 PM
Last Updated : 05 May 2022 06:55 PM

மரடோனாவின் 'ஹேண்ட் ஆஃப் காட்' ஜெர்சி ஏலத்தில் உலக சாதனை: 7.14 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை 

லண்டன்: அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் மரடோனாவின் 'ஹேண்ட் ஆஃப் காட்' ஜெர்சி ஏலத்தில் உலக சாதனை படைத்துள்ளது. சுமார் 7.14 மில்லியன் பவுண்டுகளுக்கு அந்த ஜெர்சி விலை போயுள்ளது.

கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுபவர் டியாகோ மரடோனா. கடந்த 2020 நவம்பரில் மறைந்தார் அவர். அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரையில் சர்வதேச அளவில் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தன் நாட்டுக்காக பதிவு செய்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 34. நான்கு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 1986 உலகக் கோப்பையை வென்றிருந்தது அர்ஜென்டினா. கோப்பை வென்ற அணியின் கேப்டனாக செயல்பட்டவரும் மரடோனா தான்.

அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான காலிறுதியில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தது அர்ஜென்டினா. அந்த இரண்டையும் ஸ்கோர் செய்தவர் மரடோனா தான். போட்டியின் 51 மற்றும் 55-வது நிமிடத்தில் அந்த கோல்களை அவர் பதிவு செய்திருந்தார். இதில் அவர் பதிவு செய்த முதல் கோல் 'ஹேண்ட் ஆஃப் காட்' என வர்ணிக்கப்படுகிறது. அந்தப் போட்டி முடிந்ததும் அது குறித்து மரடோனா பேசியிருந்தார். தொடர்ந்து அடுத்த நான்கு நிமிடங்களில் 'நூற்றாண்டின் சிறந்த கோல்' என வர்ணிக்கப்படும் கோலை அதே போட்டியில் பதிவு செய்திருந்தார் மரடோனா.

அந்தப் போட்டியில் மரடோனா அணிந்து விளையாடிய ஜெர்சிதான் இப்போது 7.14 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தான் அணிந்திருந்த ஜெர்சியை அந்தப் போட்டி முடிந்ததும் இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் வசம் கொடுத்துள்ளார் மரடோனா. இப்போது அதனை அவர் ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். மரடோனா ரசிகர்கள் அதனை ஏலத்தில் விடுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், அவர் இதனை செய்துள்ளார் என தெரிகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.67 கோடி எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x