

கொல்கத்தா: 66 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால், தனது நீண்ட கால நண்பரான 38 வயது புல்புல் சாஹா என்ற பெண்ணை கரம்பிடித்துள்ளார்.
1982 முதல் 1989 வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் அருண் லால். பின்னர், கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யும் பணியை கவனித்து வந்தார். இப்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது பயிற்சியின் கீழ் அபாரமான ஆட்டத்தை டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி உள்ளது மேற்கு வங்க அணி. இந்நிலையில், அவர் இப்போது தன் நீண்ட கால நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இவர்களின் திருமணத்தையொட்டிய நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலானது. அருண் லால், தனது முதல் மனைவி ரீனாவை பிரிந்துவிட்டார். முதல் மனைவியின் அனுமதியுடனே தற்போது 38 வயது புல்புல்லை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என சொல்லப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவரது முதல் மனைவி ரீனாவை இரண்டாவது மனைவியுடன் அருண் லால் கவனித்துக் கொள்வார் எனவும் நெருங்கிய உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் புல்புல்லை திருமணம் செய்து கொண்டுள்ளார் லால். இந்த நிகழ்வு கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது.