Published : 02 May 2022 09:25 PM
Last Updated : 02 May 2022 09:25 PM

விம்பிள்டனில் ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை | "இது அநியாயம்" - நடால், ஜோகோவிச் காட்டம்

கோப்புப் படம்

மேட்ரிட்: நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்ட சூழலில், தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் ரஃபேல் நடாலும், ஜோகோவிச்சும்.

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன் டென்னிஸ் தொடர். சுமார் 145 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்டது. டென்னிஸ் விளையாட்டின் பழமையான தொடர்களில் ஒன்று. கரோனா தொற்று பரவல் காரணமாக 2020 தொடர் கைவிடப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது. இதில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து யுத்தம் மேற்கொண்டுள்ள காரணத்தால் ரஷ்யா மற்றும் அதற்குத் துணையாக இருந்த பெலாரஸ் நாட்டு வீரர்கள் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க தடை விதித்து உள்ளனர், விம்பிள்டன் தொடர் ஒருங்கிணைப்பாளர்கள். அதனால் டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரும், ரஷ்யாவை சேர்ந்தவருமான டேனியல் மெத்வதேவ் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

"இது அநியாயம். போருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை. இந்த தடையை எண்ணி அவர்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால், இப்படி அவர்களுக்கு நடந்திருக்கக் கூடாது. இது என்னவென்று நம் எல்லோருக்கும் தெரியும். அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையை நாம் பின்பற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் நடால்.

"இது போன்றதொரு சிக்கலை நானும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்கொண்டேன். எனக்கு நடந்ததும், இப்போது நடப்பதும் வேறு வேறு காரணங்களை கொண்டது. நம்மால் விளையாட முடியாது என்பது வீரர்களுக்கு விரக்தி அளிக்கும் விஷயம்" என தெரிவித்துள்ளார் செர்பிய நாட்டின் ஜோகோவிச். இவர் விம்பிள்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x