Published : 27 Apr 2022 07:55 AM
Last Updated : 27 Apr 2022 07:55 AM

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா வேதனை

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் இலக்கை துரத்திய நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அம்பதி ராயுடு 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய போதிலும் சென்னை அணி வெற்றிக்கோட்டை எட்ட முடியாமல் போனது.

அம்பதி ராயுடு ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய நிலையில் மறு முனையில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடியது வெற்றியை வெகுவாக பாதித்தது. 12.4-வது ஓவரில் களமிறங்கிய ஜடேஜா கடைசி வரை களத்தில் நின்று 16 பந்துகளில் 21 ரன்களே சேர்த்தார். 18-வது ஓவரிலேயே சென்னை அணி வெற்றியை நழுவவிடத் தொடங்கியது.

அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரில் 6 ரன்களும், ரபாடாவின் அடுத்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. இதுவே கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுக்க வேண்டும் என மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. முன்னதாக பவர் பிளேவையும் சென்னை அணி பயன்படுத்திக்கொள்ளத் தவறியது. பவர் பிளேவில் 2 விக்கெட்களை இழந்து 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது சென்னை அணி. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.

போட்டி முடிவடைந்ததும் சென்னை கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறும்போது, “பந்து வீச்சை நாங்கள் சிறப்பாகவே தொடங்கினோம். இறுதிபகுதியில் 10 முதல் 15 ரன்களை கூடுதலாக வழங்கியதாக உணர்ந்தோம். நாங்கள், எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. அம்பதி ராயுடு அற்புதமாக பேட்டிங் செய்தார்.

ஆனால் முன்பே நான் கூறியது போன்று பஞ்சாப் அணியை 175 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அங்குதான் தேக்கம் அடைந்துவிட்டோம். வலுவாக மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இன்றைய ஆட்டம் குஜராத் – ஹைதராபாத்

நேரம் : இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x