Published : 23 Apr 2022 09:16 PM
Last Updated : 23 Apr 2022 09:16 PM

IPL 2022 | 3 டக் அவுட்... ஆர்சிபி அணியை 68 ரன்களில் சுருட்டிய ஹைதராபாத்

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணிக்கு அனுஜ் ராவத், பாப் டூ பிளசிஸ் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த ஐபிஎல் சீசனிலேயே மோசமான தொடக்கமாக அது அமைந்தது. 2-வது ஓவரில் மார்கோ ஜான்சன் வீசிய பந்து பாப் டூ பிளசிஸைக் கடந்து சென்று ஸ்டம்பை பதம் பார்க்க 5 ரன்களிலேயே அவர் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலியும், களத்திலிருந்த அனுஜ் ராவத்தும், தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுக்க அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி.

ஆனால், விக்கெட்டுகளை தாரைவார்க்கும் ஆர்சிபியின் தாராள மனப்பான்மை அத்தோடு நிற்கவில்லை. 4-வது ஓவரில் மேக்ஸ்வெல் 12 ரன்களில் வெளியேற, 9-வது ஓவரில் சுயாஷ் பிரபுதேசாய் 15 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்கள் அணிக்கு நம்பிக்கை கொடுக்காமல் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஷபாஸ் அஹமத் 7 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ரன்களும் என ஒற்றை இலகத்துடனேயே வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியது ஆர்சிபி ரசிகர்களை விரக்தியடையச் செய்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆர்சிபி 68 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் 3 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அணி தரப்பில், மார்கே ஜென்சன், நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெகதீஷ் 2 விக்கெட்டுகளையும், உமர் மாலிக், புவனேஷ்குமார் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x