Published : 13 Apr 2022 11:38 PM
Last Updated : 13 Apr 2022 11:38 PM

IPL 2022 | மும்பைக்கு சோதனையாக மாறிய ரன் அவுட் - மூன்றாவது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

புனே: ஐபிஎல் 15வது சீஸனின் 23வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

199 ரன்கள் என்ற மெகா இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இந்த முறை ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் நல்ல துவக்கம் கொடுக்கவில்லை. முதல் 3 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 4வது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இஷான் கிஷனை வைபவ் அரோரா வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.

ஆனால், இந்தப்பின் வந்த பேபி ஏபி எனப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் திலக் வர்மா இணை மும்பை அணியை தடுமாற்றத்தில் இருந்து நிமிரச் செய்தது. பேபி ஏபி, ராகுல் சஹர் வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வான வேடிக்கை நிகழ்த்த, அவருக்கு பக்க பலமாக திலக் வர்மாவும் பவுண்டர்களில் விளாசினார். இதனால் ஆட்டம் கொஞ்சம் மும்பை பக்கம் சென்றது. பேபி ஏபியை அவுட் ஆக்க பல முயற்சிகளை எடுத்தார் பஞ்சாப் கேப்டன் மயங்க். இறுதியாக ஓடியன் ஸ்மித் ஓவரில் முதல் பந்தை சிக்ஸ் அடித்தவர், அடுத்த பந்தையும் அதேபோல் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். 49 ரன்கள் சேர்த்த அவர், அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் நன்றாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அடுத்த வீரராக களம் புகுந்தார். சூர்யகுமாரின் ரன் ரவுட் ராசி இந்தமுறையும் விடவில்லை. வந்ததுமே, 36 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை வெளியேற்றியவர், அடுத்ததாக சிறிதுநேரத்தில் பொல்லார்ட்டையும் 10 ரன்களில் ரன் அவுட் ஆக்கினார். எனினும், சூர்யகுமார் களத்தில் இருந்தது நம்பிக்கை அளித்தது. அதற்கேற்ப அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 19வது ஓவரை ரபடா வீசினார். சிக்ஸ் அடிக்க முயன்று 43 ரன்களில் கேட்ச் ஆக, இறுதி ஓவரில் 6 பந்துகளை 22 ரன்கள் தேவைப்பட்டது.

மீண்டும் ஓடியன் ஸ்மித்திடம் பந்தை கொடுத்தார் மயங்க். எதிர்முனையில் இருந்த உனட்கட் முதல் பந்தில் சிக்ஸும், அடுத்த பந்தில் இரண்டு ரன்களும் சேர்த்தவர், மூன்றாவது பந்தில் கேட்ச் ஆக்கினார். இதன்பின் வந்த பும்ரா, மில்ஸ் அடுத்தடுத்து அவுட் ஆக பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் ஓடியன் ஸ்மித். பஞ்சாப் கிங்ஸ் பெரும் மூன்றாவது வெற்றி இதுவாகும். கடைசி வரை போராடிய மும்பை மீண்டும் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் ஒரு வெற்றிகூட இதுவரை மும்பை பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான், மயங்க் அகர்வால் இணை துவக்கம் கொடுத்தது. விக்கெட்டை இழக்காமல் சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த இணையை 9-வது ஓவரில் முருகன் அஸ்வின் பிரித்தார். அவர் வீசிய பந்தில் மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி வெளியேறினார். 32 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து அணிக்கு பலமாக திகழ்ந்தார் மயங்க் அகர்வால்.

அடுத்தாக களத்துக்கு வந்த ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவானுடன் கைகோத்தார். ஆனால், அவரை நீண்ட நேரம் நிலைக்கவிடாமல், ஜெய்தேவ் உனட்கட் போல்டாக்கி அனுப்பினார். 11 ரன்களில் பேர்ஸ்டோவ் வெளியேற, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டனும் பும்ரா வீசிய பந்தில் போல்டாகி நடையை கட்டினார்.

இதையடுத்து, 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 132 ரன்களை சேர்த்தது. 50 பந்துகளில் 70 ரன்களை குவித்து அதிரடி காட்டி வந்த ஷிகர் தவானை 16-வது ஓவரில் பாசில் தம்பி பெவிலியனுக்கு அனுப்பினார். தொடர்ந்து வந்த ஷாருக்கான் 15 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. ஜித்தேஷ் ஷர்மா 30 ரன்களிலும், ஓடியன் ஸ்மித் 1 ரன்களிலும் நாட்அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தரப்பில் பாசில் தம்பி 2 விக்கெட்டுகளையும், உனட்கட், பும்ரா, முருகன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x