Published : 12 Apr 2022 03:15 PM
Last Updated : 12 Apr 2022 03:15 PM

IPL 2022 | தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதில் சிக்கல்; சென்னைக்கு பின்னடைவு

தீபக் சாஹர்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு தீபக் சாஹரை வாங்கியிருந்தது சென்னை அணி. கடந்த சீசன்களில் அவர் பவர்பிளே ஓவர்களில் அணிக்கு தேவைப்படும் எதிரணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுக்கும் பவுலராக அசத்தியவர். அதிரடியாக பேட்டிங் செய்யும் திறனும் படைத்தவர். பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடை பகுதியில் அவருக்கு தசை சிதைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் 15-வது ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளை மிஸ் செய்வார் என சொல்லப்பட்டது.

இருந்தாலும் காயத்திலிருந்து மீண்டு அவர் ஏப்ரல் மத்தியில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. சுமார் ஒருமாத காலமாக அவர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பார்வையில் உள்ளார். இந்நிலையில், அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காயத்தினால் அவர் இந்த ஐபிஎல் சீசன் முழுவதையும் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

2018 சீசன் முதல் சென்னை அணிக்காக விளையாடி வருபவர் தீபக் சாஹர். சென்னை அணிக்காக 58 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் இல்லாமல் சென்னை அணி நடப்பு சீசனில் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறி வருகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை. இந்த போட்டி டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x