Published : 11 Apr 2022 05:33 PM
Last Updated : 11 Apr 2022 05:33 PM

IPL 2022 | நடப்பு சீசனில் சென்னை அணி மிஸ் செய்யும் 5 வீரர்கள்

மும்பை: கடந்த சீசனில் விளையாடிய ஐந்து வீரர்களை நடப்பு சீசனில் மிஸ் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. யார் அந்த ஐந்து வீரர்கள்? - இதோ ஒரு பார்வை.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் நான்கு லீக் ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சீசனில் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வி பெற்றுள்ளது இதுவே முதல்முறை.

புள்ளிப்பட்டியலில் இப்போதைக்கு சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு இந்த சீசனின் தொடக்கம் சங்கடத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே கேப்டன் பொறுப்பை ஜடேஜா வசம் ஒப்படைத்தார் மகேந்திர சிங் தோனி. அணியின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்ட அந்த முடிவை பலரும் வரவேற்றிருந்தனர். இருந்தாலும் களத்தில் ஒரு கேப்டனாக ஜடேஜா கொஞ்சம் தடுமாறி வருவதைப் பார்க்க முடிகிறது.

மெகா ஏலத்திற்கு முன்னதாக ஜடேஜா, தோனி, மெயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைத்தது சென்னை. மெகா ஏலத்தில் கிட்டத்தட்ட 2021 சீசனில் விளையாடிய சில வீரர்களை வாங்கியிருந்தது. உத்தப்பா, ராயுடு, தீபக் சஹார், பிராவோ முதலான வீரர்கள் இதில் அடங்குவர். அதே நேரத்தில் 2021 சீசனில் சென்னை அணி கோப்பை வெல்ல உதவிய வீரர்களை ஏலத்தில் வாங்க தவறியிருந்தது. தற்போது அவர்களைத்தான் இந்தத் தருணத்தில் மிஸ் செய்து வருகிறது சென்னை அணி.

> ஜோஷ் ஹேசில்வுட்

ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் வீரரான ஜோஷ் ஹேசில்வுட் கடந்த சீசனில் சென்னை அணிக்காக அபாரமாக பந்து வீசி அசத்தியிருந்தார். 2021-இல் ஒன்பது ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். 2021 பைனலில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

பவுன்ஸர் வீசுவது, துல்லியமான லைன், வேகம் என பந்துவீச்சில் வெரைட்டி காட்டியிருந்தார். இருந்தாலும் சென்னனை அணி அவரை ஏலத்தில் வாங்கவில்லை. தற்போது அவர் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளார்.

> சாம் கர்ரன்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான சாம் கர்ரனை சென்னை அணி நடப்பு சீசனில் அதிகம் மிஸ் செய்ய வாய்ப்புள்ளது. அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான பேலன்ஸ் கொடுத்தவர். காயம் காரணமாக அவர் நடப்பு சீசனில் அவர் பங்கேற்கவில்லை. சென்னை அணிக்காக 23 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 242 ரன்களும் சேர்த்துள்ளார் அவர். அவரது இடத்தை நிரப்பும் சரியான மாற்று வீரரை சென்னை அணி நடப்பு சீசனில் தேர்வு செய்யவில்லை.

> ஷர்துல் தாக்கூர்

2018 முதல் சென்னை அணிக்காக விளையாடி வந்தவர் ஷர்துல் தாக்கூர். ஆல்-ரவுண்டரான இவர் கடந்த சீசனில் அற்புதமாக பந்து வீசி அசத்தியிருந்தார். விக்கெட் தேவைப்படும் நேரங்களில் முன்னாள் கேப்டன் தோனி, தாக்கூரை பந்து வீச பணிப்பார். அப்படி வரும் நேரமெல்லாம் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியவர். கடந்த சீசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் தாக்கூர். நடப்பு சீசனில் அவர் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

> டூப்ளசி

2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசி. ஐபிஎல் களத்தில் சென்னைக்காக மட்டுமே 2721 ரன்கள் சேர்த்தவர். 2018 சீசனை தவிர மற்ற அனைத்து சீசனிலும் சென்னைக்காக விளையாடி 300 ரன்களுக்கு மேல் எடுத்தவர். கடந்த 2021 சீசனில் 633 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் இறுதிப் போட்டியில் 86 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றவர். சென்னை நான்கவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல இவரது ஆட்டமும் ஒரு காரணம்.

இந்நிலையில், 2022 சீசனுக்கான ஏலத்தில் அவரை வாங்க தவறியது சென்னை அணி. ருதுராஜுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அசத்தியவர். தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

இவர்களைத் தவிர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியை சென்னை மிஸ் செய்யும். மேலும், ஏலத்தில் வாங்கப்பட்டும் காயம் காரணமாக தீபக் சஹார் நடப்பு சீசனில் சென்னனை அணிக்காக விளையாடாமல் உள்ளதும் அணிக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x