Published : 10 Apr 2022 11:44 PM
Last Updated : 10 Apr 2022 11:44 PM

IPL2022 | சஹால் சுழலில் வீழ்ந்த லக்னோ பேட்ஸ்மேன்கள் - 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15வது சீசனின் 19-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில டாஸ் வென்ற லாக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், தேவ்தட் படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை 5 ஓவர் வீசிய ஆவேஷ்கான் பிரித்தார். அவர் வீசிய பந்து பட்லரைக்கடந்து ஸ்டேம்பை தட்டித்தூக்கியது. 13 ரன்களிலேயே அவர் நடையைக் கட்டினார். களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கலுடன் கைகோத்தார்.

10 பந்துகளில் 12 ரன்களே எடுத்து சஞ்சு சாம்சனை ஜேசன் ஹோல்டர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அடுத்து தேவ்தட் படிக்கலும் 29 ரன்களில் வெளியேற, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனும் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார். இதனால் 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்திருந்தது.

ஹெட்மேயர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணைந்து ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் 165 ரன்களை சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் கிருஷ்ணப்பா கௌதம், ஜெசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டையும், அவேஷ்கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமறிங்கிய லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல், குயிண்டன் டீகாக் ஆகியோர் களமிறங்கினர். கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். முதல் ஓவரிலேயே லக்னோ அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கே.எல்.ராகுலும், கிருஷ்ணப்பா கௌதமும் ரன் எதுவும் எடுக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறினர்.

அடுத்ததாக களத்துக்கு வந்த ஜேசன் ஹோல்டரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தடுமாற்றத்துடனே காணப்பட்ட லக்னோ அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பில் 61 ரன்களை சேர்த்தது. ஒருபுறம் குவிண்டன் டீகாக் மட்டும் நிலைத்து ஆட, மறுபுறம் வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். 15 ஓவரில் டீகாக்கை சஹால் வெளியேற்ற 39 ரன்களில் அவர் நடையை கட்டினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் நிலைக்காததால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை சேர்த்தது லக்னோ. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் அணி தரப்பில், சஹால் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா, குல்தீப் சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x