Published : 08 Apr 2022 05:51 AM
Last Updated : 08 Apr 2022 05:51 AM

'கம்மின்ஸ் ஆட்டம் எதிர்பாராதது' - மும்பை கேப்டன் ரோஹித் சர்மா வியப்பு

புனே: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் புனேவில் நடந்த மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 161 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 162 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் தேவையாக இருந்தது. டேனியல் சேம்ஸ் வீசிய 16-வது ஓவரில் பாட் கம்மின்ஸ் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 35 ரன்களை விளாச 4 ஓவர்களை மீதம் வைத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பாட் கம்மின்ஸ் 15 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி மிரட்டினார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்திருந்த கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்தார் பாட் கம்மின்ஸ்.

போட்டியின் முடிவில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “பாட் கம்மின்ஸ் இப்படி வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. பேட்டிங்கின் போது நாங்கள் சரியாக தொடங்கவில்லை.

பந்து வீச்சில் 15 ஓவர் வரை ஆட்டம் எங்கள் பக்கமே இருந்தது. ஆனால் கம்மின்ஸ் விளையாடிய விதம் அனைத்தையும் மாற்றிவிட்டது. கடைசி சில ஓவர்களில் இதுபோன்று ஆட்டம் மாறியதை ஜீரணிப்பது கடினமாகவே இருக்கும். தேவையான கடின உழைப்பை வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x