Published : 07 Apr 2022 11:42 PM
Last Updated : 07 Apr 2022 11:42 PM

IPL 2022 | டி காக்கின் பொறுப்பான ஆட்டத்தால் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த லக்னோ

மும்பை: ஐபிஎல் 15வது சீஸனின் 15வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

150 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இணை துவக்கம் தந்தது. இந்த சீசனில் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இன்றைய ஆட்டத்திலும் கேஎல் ராகுல் நிதான துவக்கம் கொடுத்தார். ஆனால் எதிர்புறம் இருந்த டி காக் அதிரடியை வெளிப்படுத்தினார். இதனால் முதல் ஒன்பது ஓவர்களுக்கு இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. 10வது ஓவரில் குல்தீப் யாதவ் வந்தே இவர்கள் இணையை பிரித்தார்.

முதல் விக்கெட்டாக கேஎல் ராகுல் 24 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அடுத்து எவின் லூயிஸ் இருவரும் டி காக்கிற்கு உறுதுணையாக இருக்க தவறினார். எவின் லூயிஸ் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடியை தொடர்ந்த டி காக் 80 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால் ஆட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 10 பந்துகளில் வெற்றிக்கு 17 ரன்கள் என்ற நிலையில் முஸ்தபிஷுர் ரஹ்மான் வீசிய 19வது ஒரு சிக்ஸர் விளாசியதுடன் அடுத்த மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் சேகரித்தார் குர்னால் பாண்டியா. இதனால் கடைசி ஆறு பந்துகளில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய முதல் பந்தில் தீபக் ஹூடா சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.

தீபக் ஹூடாவின் விக்கெட் விழுந்தததை அடுத்து கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த சீசனில் லக்னோ அணியின் இளம் நம்பிக்கையை உருவெடுத்துள்ள ஆயுஷ் பதோனி களம்புகுந்தார். அவர் தான் சந்தித்த முதல் பந்தை ரன்கள் எதுவும் எடுக்காவிட்டாலும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோர் டை ஆக்கினார். இதற்கடுத்த பந்தே சிக்ஸர் அடித்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார் ஆயுஷ் பதோனி. இந்த சீசனில் லக்னோ அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். மேலும் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவும், டேவிட் வார்னரும் துவக்கம் கொடுத்தனர். ஒருபுறும் பிரித்வி ஷா அதிரடி காட்ட, மறுபுறம் டேவிட் வார்னர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.

முதல் 6 ஓவர் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 52 ரன்களை லக்னோ அணி சேர்த்திருந்தது. பிரித்வி ஷா 27 பந்துகளில் 47 ரன்களை குவித்திருந்தார். 9 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் 3 ரன்களை சேர்ந்திருந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரித்வி ஷாவை 7-வது ஓவரில் அவுட்டாக்கி மைதானத்தை விட்டு வெளியேற்றினார் கிருஷ்ணப்பா கௌதம். 34 பந்துகளில் 61 ரன்களை சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார் பிரித்வி ஷா.

இதையடுத்து களத்திற்கு வந்த ரோவ்மேன் பவல், டேவிட் வார்னருடன் கைகோத்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டையும் லக்னோ அணி பறிகொடுத்தது. ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார் டேவிட் வார்னர். 12 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார் வார்னர். அவரைத் தொடர்ந்து ரவி பிஷ்னோய் வீசிய பந்து ரோவ்மேன் பவலைக் கடந்து ஸ்டம்பை பதம் பார்க்க, அவரும் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

11 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை சேர்த்திருந்தது. அதன்பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் - சர்பராஸ்கான் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 149 ரன்களை சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும், கிருஷ்ணப்பா கௌதம் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x