Published : 30 Mar 2022 11:24 PM
Last Updated : 30 Mar 2022 11:24 PM

IPL 2022 | விக்கெட் மழை, கடைசி ஓவர் வரை த்ரில் - கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றிபெற்ற பெங்களூரு

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல் 15வது சீசனின் 6வது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தது. டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ் இந்த சீசனின் டிரெண்ட் படி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா 128 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய பெங்களூரு அணியிலும் கொல்கத்தாவை போல் டாப் ஆர்டர் கோட்டை விட்டது. ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே அனுஜ் ராவத்தை டக் அவுட் செய்தார் உமேஷ் யாதவ். இதேபோல் ஐந்து ரன்கள் எடுத்திருந்த டூ பிளசிஸை சவுத்தி அவுட் ஆக்க, விராட் கோலியை 12 ரன்களில் அவுட் செய்தார் உமேஷ்.

இதன்பின் வந்த டேவிட் வில்லே, ரூதர்போர்ட் மற்றும் சபாஷ் அஹமது ஆகியோர் நிதானமாக ஆடினர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டது ராயல் சேலஞ்ஜர்ஸ். டேவிட் வில்லே 18 ரன்களும், சபாஷ் அஹமது 27 ரன்களும், ரூதர்போர்ட் ரன்களும் சேர்த்தனர். இவர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க 12 பந்துகளை 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கைவசம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது.

ஹர்ஷல் படேல் வெங்கடேஷ் ஐயர் வீசிய 19வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, 6 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கடைசி ஓவரை ரஸ்ஸல் வீச, தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். முதல் பந்தே சிக்ஸராக பறக்கவிட்டவர், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கொல்கத்தாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு முதல் வெற்றியை பதிவு செய்தது. தினேஷ் கார்த்திக் 14 ரன்களும், ஹர்ஷல் படேல் 10 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் சவுத்தி 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்களும் எடுத்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸ்: அஜிங்கியா ரஹானேவும் வெங்கடேஷ் ஐயரும் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். மூன்று ஓவர் மட்டுமே இந்தக் கூட்டணி நிலைத்தது. இந்தக் கூட்டணியை உடைத்து கொல்கத்தா அணியின் சரிவை தொடங்கி வைத்தார் ஆகாஷ் தீப். 4வது ஓவரின் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் அவுட் ஆனார். பின்னர் சிராஜ் தன் பங்கிற்கு 9 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவை வெளியேற்றினார்.

ஆகாஷ் தீப் மீண்டும் நிதீஷ் ராணாவை வந்த வேகத்தில் வெளியேற்ற, இப்படியாக பவர் பிளே முடிவதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. வனிந்து ஹஸரங்கா மற்றும் ஹர்ஷல் படேல் மீதமுள்ளவர்களை பார்த்துக்கொண்டார். இவர்கள் இருவரின் பந்துவீச்சில் கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார்.

இதனால், 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து கொல்கத்தா அணி. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹஸரங்கா 4 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் மூன்று விக்கெட்களையும், ஹர்சல் படேல் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x