Published : 29 Mar 2022 09:28 PM
Last Updated : 29 Mar 2022 09:28 PM

IPL 2022 | அட்டாக்கிங் மோடில் ராஜஸ்தான், கேப்டன் நாக் ஆடிய சஞ்சு - சன்ரைசர்ஸ் அணிக்கு 211 ரன்கள் இலக்கு

புனே: இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் 15வது சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. புனே மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, லெஃப்ட் - ரைட் காம்பினேஷனில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் சீனியர் வீரர் ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை நன்றாக பயன்படுத்தி கொண்டனர். இதனால் ஐந்து ஓவர்களிலேயே 50 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

பவர் பிளே முடிந்த பின்பே இவர்கள் கூட்டணியை பிரிக்க முடிந்தது. 20 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார். சில ஓவர்களிலேயே சஞ்சு சாம்சன் உடன் ஜாஸ் பட்லர் கூட்டணி அமைக்க விடாமல் பார்த்துகொண்டார் உம்ரான் மாலிக். இதனால், பட்லர் 38 ரன்கள் எடுத்த நிலையில் உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். எனினும், கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அணி சரிவை சந்திக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இருவரும் ஆக்ரோஷமாக சன்ரைசர்ஸ் பந்துவீச்சை எல்லைக்கோட்டுக்கு சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். குறிப்பாக, ஸ்பின் ஓவர்களை குறிவைத்து அட்டாக் செய்தனர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மீண்டும் உம்ரான் மாலிக் இந்தக் கூட்டணியை பிரித்தார். 41 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கலை கிளீன் போல்டக்கி வெளியேற்றினார் உம்ரான். அதேநேரம், சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த சில நிமிடங்களில், 55 ரன்களுக்கு அவரும் வெளியேற, அதன்பின் வந்த சிம்ரோன் ஹெட்மேயர் மற்றும் ரியான் பராக் அதே அதிரடியை தொடர் 19 ஓவரிலேயே 200 ரன்களை கடந்தது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ். சன்ரைசர்ஸ் தரப்பில் உம்ரான் மாலிக் மற்றும் நடராஜன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ராஜஸ்தான் பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து வீரர்களும் அட்டாக்கிங் பேட்ஸ்மேன்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனை இந்தப் போட்டியில் நிரூபித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல்ம் சிம்ரோன் ஹெட்மேயர் என ஐவரும் குறைந்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அணியின் ரன் ரேட்டை 10-க்கும் குறையாமல் பார்த்துக்கொண்டனர். முன்வரிசை வீரர்கள் அவுட் ஆகிய போதும் அடுத்தடுத்து வந்தவர்களும் அந்த ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

ரன்களை வாரி வழங்கிய தமிழக வீரர்கள்: இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம்பெற்றிருந்தனர். இருவரின் பந்துவீச்சையும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டனர். இதனால் இருவரும் ரன்களை வாரி வழங்கும் நிலை ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்தார். இதேபோல் நடராஜன் தனது ஸ்டைலில் யார்க்கர் வீச முயன்றார். எனினும், அதை எளிதாக சமாளித்து பவுண்டரிகளாக்கினார் ராஜஸ்தான் வீரர்கள். கடைசி ஓவரில் நடராஜன் அவர்களை கட்டுக்குள் கொண்டவந்தார். சிம்ரோன் ஹெட்மேயரை கிளீன் போல்டக்கியவர் கடைசி பந்தில் ரியான் பராக் விக்கெட்டையும் எடுத்தார். நடராஜன் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x