

மும்பை: ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் 'வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல்' உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15-வது சீசன் இந்தியாவில் மீண்டும் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. முதல் போட்டி இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில், நாளைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் இரு அணி வீரர்களும்.
இதனிடையே, நாளைய போட்டி தொடர்பாக பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி, "வார இறுதி நாளில் நடக்கவுள்ள போட்டிக்கு தயாராகி வருகிறோம். ஐபிஎல் தொடர் மீதான மோகம் தீயாக பரவி இருப்பது போல் நானும் அதனை நிறைய எதிர்பார்த்து உள்ளேன். போட்டி தொடங்கும் முன் இந்த எதிர்பார்ப்பு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போல உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் இன்னொரு பேட்டியில், "கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் ஒரு தலைவராக இருந்து அணியை வெற்றியை நோக்கி முன்னேற்ற பங்களிக்க முடியும். ஆர்சிபி அணிக்காக பங்களிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்னும் அணியின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.