Published : 09 Mar 2022 08:38 PM
Last Updated : 09 Mar 2022 08:38 PM

எச்சில் முதல் மன்கட் அவுட் வரை - கிரிக்கெட்டில் புதிய விதிகளை கொண்டுவந்த எம்சிசி

துபாய்: கிரிக்கெட் போட்டிகளில் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மேரிலேபோன் கிரிக்கெட் கிளப். இந்த விதிகள் வரும் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் அல்லது சுருக்கமாக எம்சிசி என அழைக்கப்படும் கமிட்டி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளை மாற்றுவது தொடர்பான பணிகளைச் செய்து வருகிறது. கடந்த 2017-ல் கிரிக்கெட் போட்டிகளின் ஆஸ்தான விதிகளில் சிலவற்றை இந்த அமைப்பு மாற்றம் செய்தது. இதனிடையே, இந்த டி20 யுகத்துக்கு ஏற்ப கிரிக்கெட் போட்டிகளில் நிறைய விதிகளை மாற்றி தற்போது அறிவித்துள்ளது எம்சிசி. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட விதிகள் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய விதிகள் என்ன?

* சர்ச்சைக்குரிய 'மன்கட் அவுட்' இனி அதிகாரபூர்வமாக ரன் அவுட் ஆக கருதப்படும் என எம்சிசி உறுதிப்படுத்தியுளளது. நான்-ஸ்ட்ரைக்கர் சைடில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர்கள் பந்துவீசும்போது கிரீஸை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் 'மன்கட் அவுட்' செய்யலாம். இந்த விதி ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்தாலும், இது சரியான நடைமுறையாக இருக்காது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இந்தமுறையில் அவுட் செய்யாமல் இருந்தனர். இந்திய வீரர் அஸ்வின் கடந்த தொடரில் இந்தமுறையில் பட்லரை அவுட் ஆக்கியபோது சர்ச்சையானது. இதையடுத்து, இப்போது 'மன்கட்' முறையை அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக அங்கீகரித்துள்ளது எம்சிசி.

* இதற்கு முன் ஒரு வீரர் கேட்ச் செய்யப்பட்டு அவுட் ஆனால், அந்த வீரர் அவுட் ஆகும் முன்பு ரன்கள் எடுக்க ஆடுகளத்தின் பாதி தூரம் கடந்திருந்தால் புதிதாக வரும் பேட்ஸ்மேன் நான் ஸ்ட்ரைக்கர் சைடுக்கு செல்வார். அதற்கு பதிலாக ஏற்கெனவே களத்தில் இருக்கும் வீரர் பவுலிங்கை சந்திப்பார். ஆனால், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள விதியின்படி, கேட்ச் மூலம் வீரர் அவுட் ஆகும்போது களத்தில் இருக்கும் வீரர்கள் பாதி தூரம் பிட்சை கடந்திருந்தாலும், புதிய வீரரே பவுலிங்கை சந்திக்க வேண்டும்.

* ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது இரண்டு அணிகளைச் சேர்ந்த களத்துக்கு வெளியே உள்ள எந்தவொரு நபராலோ அல்லது விலங்கு போன்றவற்றாலோ ஆட்டத்துக்கு இடையூறு நிகழ்ந்தால் இனி அந்தப் பந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் டெட் பால் என அறிவிக்கப்படும். அதேபோல், பேட்ஸ்மேன் பவுலிங்கை எதிர்கொள்ள, பிட்சை விட்டு முழுமையாக வெளியேறினால் அதுவும் டெட் பால் என கருதப்படும்.

* பேட்ஸ்மேன் பவுலிங்கை சந்திக்கும்போது பீல்டிங் செய்யும் வீரர்கள் அவருக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அந்தப் பந்து டெட் பால் என்பதோடு, அதற்கு கூடுதலாக ஐந்து ரன்கள் கிடைக்கும். ஏனென்றால், பேட்ஸ்மேன் விளையாடும் நல்ல ஷாட்டை ஒருவேளை அந்த இடையூறு வீணாக்கினால், அதற்கு தண்டனையாக இந்த ஐந்து ரன்கள் கொடுக்கப்படும் என்கிறது அந்த புதிய விதி.

* சப்ஸ்டியூட் அடிப்படையில் களமிறங்கும் மாற்று வீரர்கள் செய்யும் கேட்ச் மற்றும் ரன் அவுட் புதிய விதிகளின்படி இனி அவர்களின் ரெக்கார்டுகளிளே எடுத்துக்கொள்ளப்படும்.

* ஒரு பவுலர் பந்துவீச ரன்-அப்பை தொடங்கிய பிறகு பேட்ஸ்மேன் தான் நின்ற இடத்தைக் கணக்கில் கொண்டு, அதிலிருந்து விலகிச் சென்றால் அந்தப் பந்து வைட் என்று புதிய வீதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பவுலர் ரன்-அப் தொடங்கிய பின் பேட்ஸ்மேன் நகரும் இடத்தில் இருந்து விலகிச் சென்றால் மட்டுமே வைட் என கொடுக்கப்பட்டு வருகிறது.

* பொதுவாக பந்தை ஸ்விங் செய்வதற்கு வீரர்கள் தங்கள் எச்சில் கொண்டு பந்தை ஷைன் செய்து வந்தனர். தற்போது எச்சில் பயன்படுத்த எம்சிசி தடை விதித்துள்ளது. அப்படி பயன்படுத்தினால் அது பந்தை சேதமாக்குவதாக கருதப்படும் என்று எம்சிசி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x