Published : 08 Mar 2022 07:52 PM
Last Updated : 08 Mar 2022 07:52 PM

ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் - பிசிசிஐ ஒப்புதலுக்கு காத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் ரஹ்மமுல்லா குர்பாஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்காக பிசிசிஐக்கு குஜராத் அணி நிர்வாகம் ஒப்புதல் கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக இடம்பெற்றுள்ள அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இரண்டும் மார்ச் 28-ம் தேதி முதல்முறையாக எதிர்கொள்கின்றன. இதற்கான தீவிரப் பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட தொடங்கியுள்ள நிலையில், சில தினங்கள் முன் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 'தொடர்ச்சியாக பயோ - பப்புள் பாதுகாப்பில் விளையாடி வருவதால் மன அயர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த சூழலில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும்' என்று கூறி இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடக்க ஆட்டக்காரராகவும், அதிரடி வீரராகவும் அறியப்பட்ட ஜேசன் ராய் விலகல் குஜராத் டைட்டன்ஸ்க்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இவருக்கு மாற்று வீரராக அந்த அணி யாரைத் தேர்வு செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. வரவிருக்கும் சீசனில் ராய்க்கு மாற்றாக ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மமுல்லா குர்பாஸ் குஜராத் டைட்டன்ஸ்க்காக விளையாடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

20 வயதாகும் ரஹ்மமுல்லா குர்பாஸ் வளர்ந்து வரும் டி20 ஸ்பெஷலிஸ்ட். கிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட், லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குல்னா டைகர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதன் மூலம் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் பிரபலமானவராக உள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 150-க்கும் ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். கேரியர் டி20 தொடர்களில் 69 போட்டிகளில் விளையாடியுள்ள குர்பாஸ் 113 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

அதுமட்டுமல்ல, குர்பாஸ் ஒரு விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் அவரைத் தேர்வு செய்ய கூடுதல் வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், குஜராத் அணியில் உள்ள மற்றொரு விக்கெட் கீப்பர் மேத்யூ வாட். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருப்பதால் முதல் இரண்டு வாரங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. இந்த சிக்கலையும் குர்பாஸை தேர்வு செய்வதன் மூலம் தீர்க்க குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் இருந்தபோது அவரை எந்த அணியும் தேர்வுசெய்யாத நிலையில், தற்போது இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் விருப்பம் தெரிவித்து, பிசிசிஐ ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் முதல் தேர்வு விருத்திமான் சஹா என்று இருந்துள்ளது. ஆனால், சஹா சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, ஒரு பேக் அப் வீரராக அவருடன் குர்பாஸ் பெயரையும் இணைத்து பிசிசிஐ ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. குஜராத் அணியில் ஏற்கனவே, ரஷித் கான் மற்றும் நூர் அகமது என இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குர்பாஸ் ஒப்பந்தம் செய்யப்படும் பட்சத்தில் மூன்றாவது ஆப்கன் வீரராக சகநாட்டினருடன் இணையலாம்.

முன்னதாக, ராய்க்கு மாற்றாக மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோரிக்கை வைத்து சில தினங்கள் முன் டிரெண்ட் செய்துவந்தனர். ஆனால், குஜராத் அணியின் இந்த நடவடிக்கை மூலம் ரெய்னா இடம்பெற போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x