Published : 06 Mar 2022 12:32 PM
Last Updated : 06 Mar 2022 12:32 PM

'தரையிலும், தலையணையிலும் ரத்தக்கறை' - ஷேன் வார்ன் இறப்பு குறித்து தாய்லாந்து போலீஸ் தகவல்

பாங்காக்: தாய்லாந்தில் மரணம் அடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் பிரேத பரிசோதனை நடந்து வரும் நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு அறையில் சந்தித்த போராட்டங்கள் குறித்து தாய்லாந்து போலீஸார் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன், தாய்லாந்துக்கு மூன்று மாத ஓய்வுக்காகச் சென்றவர் திடீர் மரணமடைந்த செய்தி, விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது வில்லா இல்லத்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியானது. ஷேன் வார்னுக்கு தாய்லாந்தின் கோஹ் சாமுய் (Koh Samui) பகுதியில் வில்லா ஒன்று உள்ளது.

இங்கு தனது மூன்று நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். வார்னின் நெருங்கிய நண்பராகவும், உதவியாளராகவும் அறியப்படும் ஆண்ட்ரூ நியோபிடோவ் (Andrew Neophitou) என்பவர்தான் கடைசி நிமிடங்களில் அவருக்கு முதலுதவி செய்துள்ளார்.

ஆனால், அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. தற்போது தாய்லாந்து மருத்துவமனையில் வார்னின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, தாய்லாந்து போலீஸார் வார்னின் இறப்பு நிகழ்ந்த அவரின் வில்லாவை சோதனையிட்ட பின்பு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், தாய்லாந்து போலீஸார் வெளியிட்டுள்ள தகவலில், " எங்கள் சோதனையின் போது வார்னின் அறையின் தரையிலும், குளியல் துண்டுகள் மற்றும் தலையணைகளிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டது. அதற்கு அவரது நண்பர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தபோது வார்னுக்கு இருமல் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

வார்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவரின் நண்பர் ஆண்ட்ரூ சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார். 20 நிமிடங்கள் வரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை.

வார்னின் அறையில் வாந்தி இருந்தது. ஆனால் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எங்கள் விசாரணையின் அடிப்படையில் சம்பவ இடத்தில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. அவருக்கு ஆஸ்துமா மற்றும் இதயப் பிரச்சனைகள் இருந்துள்ளதும் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. வார்ன் போதைப்பொருள் உபயோகித்த தடயங்களும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக, வார்னின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் ஜேம்ஸ், ஊடகங்களிடம் பேசியுள்ளார். அதில், "ஷேன் வார்ன் மூன்று மாத ஓய்வு எடுக்க திட்டமிருந்தார். அதன் தொடக்கம்தான் இது. தாய்லாந்து நேற்றுமுன்தினம் இரவுதான் வந்திருந்தார்.

மாலை 5 மணிக்கு மது அருந்தச் செல்வது அவர்கள் வழக்கம். வார்ன், எப்போதும் நேர மேலாண்மையைக் கடைபிடிப்பவர். மற்றவர்களை எப்போதும் 'வா, லேட் ஆகப் போகிறது' என்று அவரே துரிதப்படுத்தப்படுத்துவார். ஆனால், நேரம் ஆகியும் வார்ன் வரவில்லை. ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்த நண்பர்கள் 5.15 மணிக்கு வார்ன் அறையின் கதவை தட்டியுள்ளனர். அங்கே உணர்வில்லாமல் இருந்த அவருக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்தார்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகலாம் என்பதால் அவர்களே முதலுதவி செய்தனர். ஆம்புலன்ஸ் வந்தபின், அவர்களும் வார்னுக்கு 10 - 20 நிமிடங்கள் சிபிஆர் முதலுதவி சிகிச்சை செய்தனர். மருத்துவமனை கொண்டுசென்றும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பலனில்லை. வார்ன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" என்று விவரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x