Published : 08 Apr 2016 09:03 PM
Last Updated : 08 Apr 2016 09:03 PM

சீர்திருத்தங்கள் வேண்டாம் என்று மறுக்கிறீர்களா? : பிசிசிஐ காட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் பதிலடி

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதான பிசிசிஐ-யின் ஆட்சேபணைகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளி) பிசிசிஐ-க்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பண பலம், செல்வாக்கு பலம் மிகுந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதன் செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதில் அதன் சட்ட எல்லைகளை மீறுகிறது என்று காட்டமாக கூறியது. அதாவது பிசிசிஐ-ன் உள்ளார்ந்த நிர்வாகம், போட்டிகளில் ஒளிபரப்பு உரிமைகளை விற்பதன் மூலம் திரட்டப்படும் ஆயிரம் கோடிக்கணக்கான தொகைகள், உறுப்பினர் நியமன முறைகள் ஆகிய தனிப்பட்ட விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தன் சட்ட எல்லைகளைக் கடந்து தலையீடு செய்வதாக பிசிசிஐ தனது கண்டனத்தை எழுப்பியது.

உச்ச நீதிமன்ற அமர்வின் டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடைங்கிய நீதிபதிகள் முன்னால் என்று நடைபெற்ற விசாரணையின் போது பிசிசிஐ-யை பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும்போது, பிசிசிஐ போன்ற அமைப்புகளின் அடிப்படை செயல்பாடுகளில் தலையிடுவது என்பது கூட்டமைப்புகளை உருவாக்குவதற்கான உரிமை என்பதற்கு உகந்த அரசியல் சாசன சட்டப்பிரிவு 19 (1) (சி)-யின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டினார்.

“பிசிசிஐ ஒரு தனியார் அமைப்பு, அது தனக்கு தேவையான விஷயங்களை தன் இஷ்டப்படி ஏற்பாடு செய்து கொள்ள உரிமை உண்டு. உறுப்பினர்கள் விவகாரமெல்லாம் எங்கள் நிர்வாகத்தின் உள்விவகாரம். இதில் புகார் இருந்தால் ரெஜிஸ்ட்ரார், கூட்டுறவு அமைப்புகள், அல்லது போலீஸ் நிலையம் அல்லது கோர்ட் ஆகியவற்றை அணுகலாம். அதாவது வாரியத்தின் அடிப்படை செயல்பாடுகளிலேயே தலையீடு செய்யும் அளவுக்கு எந்த விதமான சட்டவிரோதச் செயல்களும் நடந்து விடவில்லை.

மேலும் கிரிக்கெட் ஆட்டத்துக்காகவும் அதனைக் காணும் லட்சக்கணக்கான மக்களுக்காகவும் கோர்ட் தலையிடுகிறது என்று கூறுவது சரிதான் என்றால், பேட்மிண்டன், கால்பந்து, இன்ன பிறவற்றிலும் கோர்ட் தலையிட பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி டி.எஸ்.தாக்கூர், டேபிள் டென்னிஸ், கோகோ, கபடி அல்லது கால்பந்து ஆகியவற்றில் தலையிட கோர்ட் ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பைசாவும் கிரிக்கெட் ஆட்டத்தின் நலனுக்காகவும், ஆட்டத்தை ஆடும் வீரர்களுக்காகவும், ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்கு காசு கொடுக்கும் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆகியோரின் நலன்களுக்காகவுமே. அவர்களுக்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக வேண்டாமா? என்ன நீங்கள் சீர்திருத்தப் படக்கூடாது என்று மறுக்கிறீர்களா?

நீங்கள் கூறுகிறீர்கள் தலைமைத் தணிக்கைக் குழுவிலிருந்து உங்கள் வாரியத்தில் ஒருவர் இருப்பார் என்பதற்கு ஐசிசி விதிகளில் இடமில்லை என்று, ஆனால் அமைச்சர்களை வாரிய பதவிகளில் வைக்கிறீர்கள், இது ஐசிசி விதிகளுக்கு ஏற்புடையதா?

லோதா கமிட்டி பரிந்துரைகள் பிசிசிஐ-யின் அதிகாரங்களைச் சுருக்குவதற்காக அல்ல. வாரியம் தனது பொதுச்செயல்பாடுகளை சிறந்த முறையில் செய்து முடிக்கவே.

கமிட்டி உங்கள் அதிகாரங்களையோ, பணபலத்தையோ, அல்லது, ஆணையிடும் உரிமையையோ பறிக்கவில்லை. ஆனால் நீங்கள் இன்று கூறுகிறீர்கள் நீங்கள் செயல்பட்டு வந்த விதமே போதுமானதாக இருக்கிறது என்று. அதாவது நீங்கள் சீர்திருத்த விரும்பவில்லை என்கிறீர்கள்” என்றார் நீதிபதி தாக்கூர்.

விசாரணை மேலும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x