Published : 02 Mar 2022 03:36 PM
Last Updated : 02 Mar 2022 03:36 PM

'ஒவ்வோர் ஆண்டும் 75 - 80 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு' - ஐபிஎல் குறித்து ரவிசந்திரன் அஸ்வின்

சென்னை: "நீண்ட நாட்கள் கொண்ட இந்த ஐபிஎல் தொடர், சர்வதேச தொடர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு நாடும் ஐபிஎல்லை போன்று லீக் போட்டிகளை நடத்துகின்றன" என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.

ஐபிஎல் 15-வது சீசன் மார்ச் 26 அன்று தொடங்கி மே 29 அன்று முடிகிறது. கடந்த சீசன்களை காட்டிலும், இந்தமுறை அதிகபட்சமாக 74 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கு காரணம், புதிதாக இரண்டு அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகவுள்ளன. இதனால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ளார்.

அதில், "இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே, ஐபிஎல் போட்டிகளில் தொடங்குவதால் மற்ற நாடுகளுக்கு இருக்கும் குறை, அவர்கள் சர்வதேச தொடர்களுக்கு கமிட் ஆகி இருப்பது. இம்முறை, ஐபிஎல் தொடரின்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கின்றன. இலங்கைக்கு கூட சில சர்வதேச போட்டிகள் உள்ளன.

ஆனால் பெரும்பாலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் தங்கள் சர்வதேச தொடர்களை திட்டமிடுவது வழக்கம். இந்த ஆண்டு, ஐபிஎல்லின்போது நியூசிலாந்து எந்த சர்வதேச போட்டிகளையும் கொண்டிருக்கவில்லை. ஐபிஎல் ஒரு லீக் தொடராக, கிரிக்கெட்டை நிச்சயம் பெரிய நிலைக்கு கொண்டு செல்லும் அனைத்து சாத்தியங்களும் உள்ளன. ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டை கொண்டுள்ள நாடுகளுக்கும் இது நன்றாக தெரியும். அதேநேரம், நீண்ட நாட்கள் கொண்ட இந்த ஐபிஎல் தொடர் சர்வதேச தொடர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு நாடும் ஐபிஎல்லை போன்று லீக் போட்டிகளை நடத்துகின்றன." என்று பேசிய அஸ்வின், ஐபிஎல் காரணமாக நிகழ்ந்துள்ள நன்மைகள் தொடர்பாகவும் பேசினார்.

அதில், "2008, 2010-ம் ஆண்டுகளை நினைத்துப் பாருங்கள். அப்போது இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்த 20-25 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போது, ​​ஐபிஎல் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 75 முதல் 80 வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாய்ப்பு பெறுகிறார்கள். ஐபிஎல் தொடங்கும்போது, எனது பெற்றோர் 'இந்த தொடர் கிரிக்கெட்டுக்கு உதவுமா?' என்ற கேள்வியை முன்வைத்தனர். இந்தக் கேள்விக்கு விடை, இத்தனை ஆண்டுகளாக வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை வைத்து தெரிந்துகொள்ள முடியும். ஐபிஎல் இல்லையென்றால், இந்த 10 வருட காலத்திற்குள் 15 - 20 அல்லது 25 கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இப்போது ஐபிஎல் மூலமாக சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடுவதற்கு வீரர்கள் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இது ஐபிஎல்-க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x