Published : 20 Feb 2022 03:18 PM
Last Updated : 20 Feb 2022 03:18 PM

கங்குலியின் 'வாக்குறுதி'யும், டிராவிட்டின் 'ஓய்வு' பேச்சும்- நிரந்தரமாக ஓரம்கட்டப்படுகிறாரா சஹா?

கொல்கத்தா: ''இந்திய அணியில் இனி நிரந்தரமாக இடம்கிடைக்காது என்பது ஏற்கனவே தெரியும். ராகுல் டிராவிட் என்னை ஓய்வு பற்றி சிந்திக்க வலியுறுத்தினார்" என்று இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல் அதில் நிறைய மாற்றங்கள். குறிப்பாக, விக்கெட் கீப்பர் தேர்வில் ரிஷப் பந்த் உடன் பேக் அப் பிளேயராக கேஎஸ் பரத் அணிக்கு தேர்வாகி இருந்தார். வழக்கமாக இரண்டாவது வீரராக அணிக்கு தேர்வாகி வந்த சீனியர் வீரர் விருத்திமான் சஹா இம்முறை தேர்வு செய்யப்படவில்லை. தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, சஹாவின் தேர்வு குறித்து பேசுகையில், "வயசு ஒரு பெரிய நம்பகத்தன்மையை கொடுக்கிற விஷயம் இல்லை, எந்த அடிப்படையில் சஹா தேர்வு செய்யவில்லை என்பதை வெளியில் சொல்லமுடியாது.

ஆனால் ஒரு வீரர் நீண்ட நாட்கள் விளையாமல் இருக்கும்போது மாற்றுக்கு இளைஞர்களை நோக்கி சிந்திக்கத் தொடங்கும் காலம் வரும். இளம் வீரர் நன்றாக விளையாடும்போது வயது அதிகமுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்று தேர்வாளர்கள் நினைக்கத் தொடங்குவது இயல்புதான். கேஎஸ் பரத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீண்டகாலமாக விளையாடக்கூடிய ஒரு வீரர் அணிக்குத் தேவை. ஒரு சாத்தியமான, சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் எங்களின் பொறுப்பு. அணிக்கு தேர்வாகததை சஹாவிடம் சொல்லிவிட்டோம். அவரிடம் தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை" என்று சஹாவுக்கு இந்திய அணியில் அடுத்து எதிர்காலம் இல்லை என்பது போல் பேசியிருந்தார்.

தென்னாப்பிரிக்க தொடரில் கடைசியாக சஹா இந்திய அணியில் தேர்வாகியிருந்தார். இந்த தொடரிலேயே தனக்கு அணியில் எதிர்காலம் இல்லை என்பதை அறிந்துகொண்டதாகவும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனக்கு அளித்த வாக்குறுதிப்படி நடக்கவில்லை என்றும் சஹா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது பின் பேசிய சஹா, "இலங்கை தொடருக்கு நான் தேர்வாகவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. இது முன்பே எனக்கு தெரியும். இனிமேல் நான் இந்திய அணிக்காக பரிசீலிக்கப்பட மாட்டேன் ஏற்கனவே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தென்னாப்பிரிக்க தொடரிலேயே என்னை தேர்வு செய்யக் கூடாது என்று தேர்வுக் கமிட்டி எடுத்த முடிவு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூலமாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் வலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இந்திய அணியின் வெற்றிக்காக 61 ரன்கள் எடுத்திருந்தேன். இந்த இன்னிங்சிற்கு பிறகு பிசிசிஐ தலைவர் கங்குலி தாதா வாட்ஸ்அப் மூலமாக என்னை பாராட்டினார். 'தான் பிசிசிஐ தலைவராக இருக்கும்வரை இந்திய அணியில் எனக்கு இடம் இருக்கும்' அன்று அவர் எனக்கு உறுதியளித்தார். தாதாவின் அந்த உறுதி எனக்குள் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாய் என்னைத் தொடர்புகொண்டார். எனது எதிர்கால திட்டங்களைப் பற்றி என்னிடம் பேச அவர் விரும்புவார் என்று நினைத்தேன். ஆனால், நாங்கள் பேச ஆரம்பித்ததும், ராகுல் பாய் 'இதை உங்களுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அண்மைய காலமாக, ஒரு சில தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் புதிய விக்கெட் கீப்பரை முயற்சிப்பது குறித்து பரிசீலித்துவருகிறார்கள்' என்றார். எனது வயதும், உடற்தகுதியும் தான் இதற்கு காரணமா என்று என்னுள் எழுந்த கேள்விகளை அவரிடம் கேட்டேன். அந்த காரணங்களால் மட்டுமல்ல, இளம்வீரர்களை அணிக்கு எடுக்க நிர்வாகம் விரும்புகிறது என்பதே ராகுல் பாய் பதிலாக இருந்தது. மேலும் இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவு என்பதை வெளிப்படுத்திய ராகுல் பாய், வேறு எந்த முடிவையும் (ஓய்வு) எடுக்க விரும்பினால், நீங்கள் பரிசீலிக்கலாம்' என என்னிடம் தெரிவித்தார்.

வேறு எந்த முடிவுகளையும் எடுப்பது பற்றி நான் நினைக்கவில்லை. ஏனென்றால், இன்னும் என்னிடம் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் உள்ளது. எப்போதும் நேசித்தே கிரிக்கெட் விளையாடி வந்துள்ளேன். அதை அனுபவிக்கும் வரை நான் விளையாட விரும்புகிறேன் என்று ராகுல் பாயிடம் அப்போதே தெரிவித்துவிட்டேன். இதை உரையாடல் தான் எனக்கு தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவுக்கு நிகழ்ந்தது. ஆனால் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்கும் அவர் தெரிவித்தற்கும் முரண்பாடுகள் நிறைய இருந்தது. எனக்கு புரியாத ஒன்று இதுதான். கங்குலி அன்று எனக்கு நம்பிக்கை அளித்த பிறகு, விஷயங்கள் எல்லாம் வெகுசீக்கிரமாக மாறத் தொடங்கியது என்பது தான் புரியவில்லை" என்று விரிவாக பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x