Last Updated : 15 Feb, 2022 10:37 PM

 

Published : 15 Feb 2022 10:37 PM
Last Updated : 15 Feb 2022 10:37 PM

இலங்கை ராணுவத்தில் பணியாற்றுகிறாரா மஹீஷ் தீக்‌ஷனா.. சென்னை அணி தேர்வில் சர்ச்சை ஏன்?

சென்னை: கடந்த இரு நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். அந்த எதிர்ப்புகளுக்கு காரணம், இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷனாவை சென்னை அணி வாங்கியது தான்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் மஹீஷ் தீக்‌ஷனாவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்திருந்தது சென்னை அணி. இதனையடுத்தே சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் என்று கூற்றுகளுடன் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். ரசிகர்களை தங்கள் பதிவுகளில், மஹீஷ் இலங்கை வீரர் என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை. அவர் இலங்கை ராணுவத்தில் பணியாற்றியதும் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக சொல்கின்றனர்.

தீக்‌ஷனா இலங்கை ராணுவத்தில் பணியாற்றுகிறாரா?

கொழும்புவை ஒட்டிய சேதாவெத்தா பகுதியைச் சேர்ந்த தீக்‌ஷனா, சிறுவயதில் இருந்தே தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமிக்கவராக இருந்தவர், அப்போது இருந்தே மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்தபின், கிரிக்கெட் ஆர்வலர்கள் உதவியுடன் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெயர்பெற்ற செயின்ட் பெனடிக் கல்லூரி படிப்பில் சேர்ந்துள்ளார். இங்கு தான் அவரின் தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை தொடக்கம். இங்கு படிக்கும்போது தான் 15 வயதிற்குட்பட்ட மட்டத்தில் பென்ஸ் அணியில் இணைந்து இலங்கை அளவில் சிறந்த ஆல்-ரவுண்டர் விருதை வென்றார். கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் அடித்தும் தனது திறமையை நிரூபித்தவர்.

எனினும், 19 வயத்துக்குட்பட்டோருக்குனா இலங்கை தேசிய அணியில் தீக்‌ஷனாவுக்கு இடம் கிடைக்கவில்லை. காரணம் அவரின் உடல் எடை. ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாக இருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடத்திய தோல் சோதனையிலும் தோல்வி அடைந்ததால் U19 அணிக்கான தேர்வில் இருந்து நிராகரிக்கப்பட்டார். இதையடுத்தே, தீக்‌ஷனா இலங்கை ராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கி இருக்கிறார். இலங்கை இராணுவத்தில் இணைந்ததில் இருந்து, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உடல் எடையை குறைத்த தீக்‌ஷனா, மீண்டும் கிரிக்கெட்டை கையிலெடுத்தார். இலங்கை ராணுவ கிரிக்கெட் அணியில் இணைந்து தீவிர பயிற்சிகளை தொடங்கியபோது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அஜந்தா மெண்டிஸ்.

அதோடு மற்றொரு இலங்கையின் முன்னணி வீரர்கள் திசாரா பெரேராவும், தினேஷ் சண்டிமால் இருவரும் இலங்கை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரின் உதவியோடே இலங்கை தேசிய அணியில் தீக்‌ஷனா இடம்பிடிக்க முடிந்தது. குறிப்பாக இலங்கை ராணுவத்தில் இணைந்த பிறகு, ராணுவத்தின் மீது பற்று கொண்டிருக்கிறார் தீக்‌ஷனா. இதனை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இருந்த தீக்‌ஷனா, அதுதொடர்பாக ஒருபேட்டியில் பேசும்போது இலங்கை ராணுவம் குறித்து, "அஜந்தா மெண்டிஸ் இராணுவத்தில் எனது முதல் பயிற்சியாளராக இருந்தார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்கு அறிவுரைகள் வழங்கி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை ராணுவத்திடம் இருந்து பெரும் ஆதரவு உள்ளது. ராணுவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதற்கு நாங்களே சாட்சி" என்று பேசினார். அதேநேரம் இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கத்திலும், தீக்‌ஷனா குறித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமில்லாமல், தீக்‌ஷனா 2009ல் நடந்த ஈழ இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வாவை தனது வாழ்வை மேம்படுத்த உதவியவர் என்றும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஈழத் தமிழர்கள் மீதான இலங்கையின் இனப்படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் மீதான ஏரளமான தாக்குதலுக்கு காரணமாக இருந்த இலங்கை ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தீக்‌ஷனாவை ஏலத்தில் எடுத்ததன் தொடர்ச்சியாக இந்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதில் சென்னை அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்க போகிறது என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x