Last Updated : 15 Feb, 2022 05:11 PM

 

Published : 15 Feb 2022 05:11 PM
Last Updated : 15 Feb 2022 05:11 PM

ஐபிஎல் வரை கொண்டுவந்த ஒரேயொரு யூடியூப் வீடியோ... பஞ்சாப்பின் சுனில் நரேன் இந்த ரமேஷ் குமார்!

பஞ்சாப்: ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் ரமேஷ் குமார். அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருக்கும் ரமேஷ் குமாரின் கதை சற்று வித்தியாசமானது. வியப்புக்குரியதும் கூட.

செருப்பு தைக்கும் தந்தை, வளையல் விற்கும் தாய் என எளிமையான பின்னணி கொண்டவர் ரமேஷ் குமார். ஆனால், 23 வயதாகும் அவர் பஞ்சாப்பின் ஜலாலாபாத்தில் மிகப் பிரபலம். டென்னிஸ் பால் கிரிக்கெட்டே அவரை அந்தப் பகுதியில் தெரிந்த முகமாக்கி இருக்கிறது. அந்தப் பகுதியில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால், 'நரேன் ஜலலாபதியா' என்ற பட்டபெயர் கொண்டு ரமேஷ் அழைக்கப்படுவதுண்டு. டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக கிடைக்கும் தொகையை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த ரமேஷுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இப்போது ஐபிஎல் வரை கொண்டுவர அந்த வீடியோ காரணமாக இருந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் சுனில் நரேனை இமிடேட் செய்வது போல் பவுலிங் செய்யும் ரமேஷ்குமார் அவரை போலவே, ஒரு ஓவரில் ஆறு வேரியஷன்களை காண்பிக்கிறார். பவுலிங் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் திறமையானவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் யாரோ ஒருவர் 'நரேன் ஜலாலபதியா' என்ற தலைப்பில் அவரின் ஆட்டத்தை யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில்தான் பத்து பந்துகளில் 50 ரன்கள் எடுக்கிறார் ரமேஷ். சிறிதுநாட்களில் வைரலான இதனைக் கண்ட கொல்கத்தா அணிக்காக விளையாடும் கிரிக்கெட்டர் குர்கீரத் மான், ரமேஷின் திறமையை தனது பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதன்பின் குர்கீரத் மான், மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்திற்கு ரமேஷை அழைத்து அவரின் பவுலிங் குறித்து சோதனை செய்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து, மீண்டும் அபிஷேக் நாயருக்கு அனுப்பியும் இருக்கிறார். சில நாட்கள் கழித்து ரமேஷின் மொபைலுக்கு வந்த அழைப்பு அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. போனில் பேசியது அபிஷேக் நாயர்தான். இந்தச் சம்பவத்துக்கு பிறகே ரமேஷின் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. சில நாட்களில் குர்கீரத் மான் தொழில்முறை கிரிக்கெட்டருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ரமேஷுக்கு செய்துகொடுத்ததோடு, அவரை மினெர்வா பஞ்சாப் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டுள்ளார்.

பஞ்சாபின் புகழ்பெற்ற ஜேபி அட்ரே கிரிக்கெட் தொடர் தான் தொழில்முறை கிரிக்கெட்டராக ரமேஷுக்கு முதல் தொடர். இதில் மூன்று போட்டிகளில் விளையாடி ரமேஷ் எடுத்து விக்கெட்டுகள் 12. இது மாவட்ட அணி, பஞ்சாப்பின் உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. விரைவாக மீண்டும் அபிஷேக் நாயர் ரமேஷை தொடர்புகொண்டு, அவரை மும்பைக்கு அழைத்து நேரடியாக சோதனைகளை செய்ததுடன், இப்போது கொல்கத்தா அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு ஏலத்திலும் எடுத்துள்ளார். ஒரு யூடியூப் வீடியோவில் தொடங்கிய ரமேஷின் வாழ்க்கை இன்று அவர் நினைத்து பார்க்க முடியாத இடத்தில் கொண்டுசென்றுள்ளது.

இவை அனைத்துக்கும் காரணம், சக மாநில வீரரான குர்கீரத் மான்தான். "என் வாழ்க்கை இந்த நிலையை எட்டியதற்கு குர்கீரத் பாஜிக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். அவர் எனக்காக நிறைய செய்திருக்கிறார். அவர் இல்லையென்றால், எனது வாழ்க்கை டென்னிஸ் பால் கிரிக்கெட்டோடு முடிந்திருக்கும்" என்னும் ரமேஷ் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுவதன் பின்னணி தொடர்பாகவும் பேசியுள்ளார். அதில், "கிரிக்கெட் எனது விருப்பம் அல்ல. அது என் தொழில். நான் 16 வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். டென்னிஸ் பந்துப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். அதைப் பெறுவதற்காகவே கிரிக்கெட்டை எனது தொழிலாக்கிகொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

அந்த யூடியூப் வீடியோ இங்கே

மேற்கிந்திய தீவுகள் வீரர் சுனில் நரேன் ஏற்கெனவே கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக உள்ளார். இப்போது அவருடன், ஜலாலாபாத்தின் ரமேஷும் சேர்ந்தது எதிரணிகளின் விக்கெட்களை வேட்டையாட இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x