Published : 05 Feb 2022 10:02 PM
Last Updated : 05 Feb 2022 10:02 PM

U-19 உலகக் கோப்பை: 5வது முறை கோப்பையை வெல்லுமா இந்திய இளம்படை - 190 ரன்கள் இலக்கு

ஆண்டிகுவா: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதிவருகின்றன. இதில் இந்திய அணி தனது வலிமைக்க பவுலிங்கால் இங்கிலாந்தை சுருட்டியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒப்பனர்களாக ஜார்ஜ் தாமஸ் மற்றும் ஜேக்கப் பீத்தல் வந்தனர். இந்த சீசனில் இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக இருந்த இந்த ஜோடியை இரண்டாவது ஓவரிலேயே பிரித்தார் இந்திய பவுலர் ரவிக்குமார். இரண்டே ரன்களில் அவரை வெளியேற்றினார். அடுத்துவந்த இங்கிலாந்து கேப்டன் டாம் பெர்ஸ்ட்டை அதே ரவிக்குமார் தனது இரண்டாவது ஓவரில் டக் அவுட் செய்தார்.

ரவிக்குமார் இங்கிலாந்தின் விக்கெட் சரிவை தொடங்கி வைத்தாலும், இந்தியாவின் ஸ்டார் ஆல் ரவுண்டர் ராஜ் பாவா அதை முழுவதுமாக பார்த்துக்கொண்டார். டாம் பெர்ஸ்ட்டுக்கு பிறகு வந்த அடுத்த மூன்று வீரர்களையும் (ஜேம்ஸ் ரெவ்வை தவிர) பத்து ரன்களுக்கு மேல் எடுக்கவிடாமல் அவுட் செய்தார். ஓப்பனிங் இறங்கி சிறிதுநேரம் நிலைத்திருந்த ஜார்ஜ் தாமஸையும் காலி செய்தார் ராஜ் பாவா. இதனால் 91 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

ஜேம்ஸ் ரெவ் மட்டும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடினார். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய ஜேம்ஸ், போக போக அதிரடியாக விளையாடினார். இறுதியாக 95 ரன்கள் எடுத்திருந்த போது ரவிக்குமார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் ராஜ் பாவா கடைசி விக்கெட்டையும் எடுக்க, 45வது ஓவரில் இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா ஐந்து விக்கெட்டுகளும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி கடைசியாக 1998ம் ஆண்டு பட்டம் வென்றிருந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மகுடம் சூடும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியை போன்றே இங்கிலாந்து அணியும் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுவது இது 8-வது முறையாகும். 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு இம்முறை யாஷ் துல் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். கடந்த 1988 முதல் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பையை அதிக முறை வென்ற அணியும் இந்திய அணிதான். இப்படி ஜூனியர் உலகக்கோப்பையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் இந்திய அணி மீண்டுமொரு முறை கோப்பை வெல்ல ரன்கள் இலக்கை துரத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x