Published : 04 Feb 2022 08:26 PM
Last Updated : 04 Feb 2022 08:26 PM

2022 குளிர்கால ஒலிம்பிக்: ஒற்றை வீரராக தேசிய கொடியை ஏந்திச் சென்ற இந்தியாவின் ஆரிஃப் கான்

பெய்ஜிங்: 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் தொடங்கியுள்ள நிலையில், இதன் தொடக்க நிகழ்வில் இந்திய தடகள வீரரான ஆரிஃப் கான் ஒற்றை இந்தியராக தேசிய கொடியை ஏந்திச்சென்றார். இவர் மட்டுமே இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்தியரும்கூட.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கில் மொத்தம் 15 பிரிவுகளில் மொத்தம் 109 பதக்கங்களுக்கான போட்டிகள் நடக்கவுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக பெய்ஜிங், யாங்கிங் (Yanqing), ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய 3 இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் BIRDS NEST மைதானத்தில் தொடக்க விழா சிறப்பாக நடந்தது.

முன்னதாக, சீனாவில் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமை மீறலை சுட்டிக்காட்டி, குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். அதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை ஒலிம்பிக்கில் ஜோதி தீத்தை தீபமேந்துபவராக நியமித்ததை கண்டித்து இந்தியா சார்பிலும் அரசு பிரதிநிதிகள் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்துள்ளனர். என்றாலும், இந்தியா சார்பில் குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாட காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஆரிஃப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார். இவர் ஆல்பைன் ஸ்கீயிங் ஸ்லலோம் மற்றும் ஜெயிண்ட் ஸ்லாலோம் (alpine skiing slalom and the giant slalom) எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் ஐகானிக் பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழா அணிவகுப்பில் ஆரிஃப் கான் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றார். சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்த ஆரிப் கான் தனது பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சூழ இந்தியக் கொடியை தனியாளாக ஏந்திச் சென்றார். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக ஆரிப் கானை தனது வலைதள பக்கம் மூலமாக வெகுவாக பாராட்டினார்.

காஷ்மீர் முதல் ஒலிம்பிக் வரை - முகமது ஆரிஃப் கான் பயணம்!

31 வயதான ஆரிஃப் கான் தனது தந்தையால் நான்கு வயது முதல் பனிச்சறுக்கு விளையாட்டை விளையாட தொடங்கினார். 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 18 வயதாக இருந்தபோது தொழில்முறை பனிச்சறுக்கு வீரராக உருவெடுத்தவர், அதன்பிறகு இதுவரை 127 சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். என்றாலும், பெரும்பாலான நிகழ்வுகளுக்கு தனது சொந்த செலவில் சென்றே போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அவரின் குடும்பம் முக்கியமான ஆதரவாக இருந்தது. கானின் தந்தை 1980களில் இருந்து காஷ்மீரின் குல்மார்க்கில் சுற்றுலா நிறுவனம் மற்றும் உபகரணக் கடையை நடத்தி வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானம் மூலமாக தான் அவரை சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் பங்கேற்க வைத்துள்ளார். ஆனால் 2018-ம் ஆண்டில் காஷ்மீரில் ஏற்பட்ட அமைதியின்மை சுற்றுலா தொழிலை பாதிக்க, அவர்களின் குடும்ப வருமானம் பாதித்தது. இது அவரின் விளையாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்த, குரூப் பண்டிங் எனப்படும் மக்களின் நிதி மூலம் அதை தொடர முயற்சி எடுத்துள்ளார்.

அது பலன் கொடுக்கவில்லை என்றதும், ஒருகட்டத்தில் விளையாட்டை நிறுத்தும் முடிவுக்குச் சென்றுள்ளார். இந்த நேரத்தில், தனியார் நிறுவனமான JSW குழுமத்தின் விளையாட்டுப் பிரிவான JSW ஸ்போர்ட்ஸ் ஸ்பான்சர்ஷிப் கொடுக்க முன்வர, தனது கனவை மீண்டும் உயிர்ப்புடன் தொடங்கி தற்போது குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபெற்றுள்ளார்.

JSW ஸ்போர்ட்ஸ் அவருக்கு விளையாட்டு போட்டிகளுக்கான 40 சதவீத செலவை ஏற்றுக்கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு 10 சதவீத செலவை ஏற்றுக்கொள்ள, மீதியை ஆரிஃப் கானை சமாளித்துவருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x