Published : 24 Jan 2022 05:51 PM
Last Updated : 24 Jan 2022 05:51 PM

கேப்டன்ஷிப் முதல் பார்ட்னர்ஷிப் வரை - தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணி சறுக்கியது எங்கே?

2017-க்கு பிறகு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சேஸிங், போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கு. இந்த கூற்று, தென் ஆப்பிரிக்க அணியின் தற்கால நிலைமையை எளிதாக விளக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாக நெருக்கடி, நட்சத்திர வீரர்களின் ஓய்வு மற்றும் இனவெறி குற்றச்சாட்டுகள் என அந்த அணி சந்திக்காத பிரச்சினைகளே இல்லை என்னும் அளவுக்கு நிலைமை.

போதாக்குறைக்கு ரபாடா, நோக்கியா என அணியின் முக்கிய வீரர்கள் இல்லை. டி காக், டேவிட் மில்லர் போன்றோர் எப்போது ஃபார்மில் இருப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படிப்பட்ட அணியை எதிர்கொண்டது விராட் கோலி, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அஸ்வின், பும்ரா, புவனேஸ்வர், ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் என சீனியர், ஜூனியர் நிறைந்த பலமிக்க இந்திய அணி. ஆனால், முழுபலத்துடன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது. வரலாற்றில் இந்தியா சந்தித்த மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று என சீனியர் வீரர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் இந்த வரலாற்று தோல்விக்கு பின்னால் உள்ள பிரச்சினைகள் சொல்லிமாள முடியாதவையாக உள்ளன.

இந்திய அணி சறுக்கியது எங்கே?

மிடில் ஆர்டர்: ஆண்டு ஆண்டுகாலமாக விவாதிக்கப்பட்டாலும் தீராத மிடில் ஆர்டர் சொதப்பல்கள் மீண்டும் நிகழ்ந்ததே தோல்விக்கான முதல் சறுக்கல். குறிப்பாக, 2019 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இது மிகவும் மோசமாகிவிட்டது. 2020 நியூசிலாந்து தொடரிலும் மிடில் ஆர்டர் பிரச்சினையால் ஒயிட்வாஷ் ஆகி வெறுங்கையுடன் நாடு திரும்பியது. அதே ஆண்டு ஆஸ்திரேலிய டூரிலும் தோல்வியே. இப்போது மூன்றாவது தொடர் தோல்வி இது.

மற்ற தொடர்களை விட தென் ஆப்பிரிக்க தொடரில், பவுலிங்கிலும் மிடில் ஓவர்களில் கோட்டைவிட்டது இந்தியா. ஒட்டுமொத்த தொடரிலும் பும்ரா மட்டுமே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை அச்சப்படுத்தும் வகையில் பவுலிங் செய்திருந்தார். புவனேஷ்வர், அஸ்வின், ஷர்துல் என மற்ற அனைத்து இந்திய பவுலர்களையும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சுலபமாகவே எதிர்கொண்டனர். அதிலும் டெப்த் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமாரின் டெப்த் ஓவர்களில் பொளந்து எடுத்தனர்.

பாட்னர்ஷிப்: மூன்று போட்டிகளிலுமே இந்தியாவுக்கு வாய்க்காத பார்ட்னர்ஷிப்பை தென் ஆப்பிரிக்க வீரர்கள் சாத்தியப்படுத்தி காட்டினர். முதல் போட்டியில் பவுமாவும் வாண்டர் டஸனும் 204 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்றால், அடுத்த போட்டியில் டி காக் - மாலன் இணை 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். மூன்றாவது போட்டியிலும் இதே டி காக், வாண்டர் டஸனுடன் இணைந்து 144 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் வெளிப்படுத்தினார்.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த மாதிரியான பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்தது இரண்டாவது போட்டியில் மட்டுமே. ராகுல் + பண்ட் இருவரும் இணைந்து 120 ரன்கள் வரை எடுத்ததே இந்த தொடரில் இந்திய வீரர்கள் அமைத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப். இதைத் தவிர, தவான் மற்றும் கோலி முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் சிறிதுநேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கேப்டன்ஷிப்: ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் அணியை வழிநடத்தினார். இரண்டு சீசன்களாக ஐபிஎல் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட ஒரு வீரர் கே.எல்.ராகுல். ஆனால் இவர்தான் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியை வழிநடத்தினாரா என்று கேட்கும் அளவுக்கு அவரின் கேப்டன்ஷிப் இருந்தது. அந்த அளவுக்கு அனுபவமின்மையை தொடரில் வெளிப்படுத்தினார். ப்ளேயிங் லெவனுக்கான வீரர்களை தேர்வு செய்வதிலேயே அத்தனை சொதப்பல்கள். முதல்போட்டியில் வெங்கடேஷ் ஐயரை கையாண்ட விதத்தில் தொடங்கி இறுதிப்போட்டியில் ஃபார்மில் இருந்த ஷர்துல் தாகூரை ஓரம்கட்ட வைத்து வரை கேப்டன்சியில் அத்தனை ஓட்டைகள்.

6-வது பவுலர் ஆப்ஷனாக அணிக்கு கொண்டுவரப்பட்ட வெங்கடேஷ் ஐயரை முதல் போட்டியில் முக்கியமான தருணத்தில்கூட ராகுல் பந்துவீச வைக்கவில்லை. இது சர்ச்சையாக இரண்டாவது போட்டியில் 20-வது ஓவருக்கு பிறகு அவரை பவுலிங் செய்ய அழைத்தார். தென்னாப்பிரிக்க அணியில் 6-வது பவுலராக இருப்பவர் மார்க்கரம். இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தபோது, தவான் - ராகுல் வலுவான கூட்டணி அமைத்திருந்தனர். அவர்களை வீழ்த்த இங்கிடி போன்ற முன்னணி பவுலர்களால் முடியாத போது பவுமா மார்க்கரமை வைத்து தவானை 11வது ஓவர் முடிந்தபோது காலி செய்தார்.

இதுமாதிரியான எந்த மாதிரியான அணுகுமுறையும் ராகுலிடம் இருந்து வெளிப்படவில்லை. மேலும் பவுலிங் ரொட்டேஷன், ரிஷப் பண்ட்டை சீக்கிரமாக கொண்டுவந்தது என ராகுலின் தவறான முடிவுகளால் வலுவிழந்த தென் ஆப்பிரிக்க அணி வலுவான வெற்றியை ருசிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்திய வீரர்கள் ஓர் அணியாக ஒருங்கிணையவில்லை என்பது இந்தத் தொடரின் தோல்வி நமக்கு பறைசாற்றுகிறது. இதை உண்மை என்பதை உணர்த்தும் விதமாக தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தனது பேட்டியில், "உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் சமநிலையான பிளேயிங் லெவன் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்தத் தோல்வி எங்களுக்கு ஒரு 'Eye Opener' ஆக இருக்கும். தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வருவோம்" என்றும் தெரிவித்துள்ளார். திராவிட் கூறியது போல் தவறுகளை திருத்திக்கொண்டு வந்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றிப்பயணம் சாத்தியமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x