Published : 24 Jan 2022 11:03 AM
Last Updated : 24 Jan 2022 11:03 AM

தெ.ஆப்பிரிக்கா தொடரில் ஒயிட்வாஷான இந்தியா: புவனேஷ் குமாருக்கு மாற்று கோரும் சுனில் கவாஸ்கர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய புவனேஷ் குமாருக்கு பதிலாக அணியில் வேறு ஒரு வீரரைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் பட்டியலில் உள்ள புவனேஷ் குமார், அண்மைக்காலமாக அவரது மோசமான விளையாட்டு காரணமாக விமர்சன வளையத்துக்குள் வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3க்கு பூஜ்ஜியம் என்ற நிலையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதில் புவனேஷ் குமாரின் மோசமான ஆட்டம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இது தொடர்பாக அவர், "அணியின் மூத்த பவுலரான புவனேஷின் விளையாட்டு அதிருப்தி அளிக்கிறது. அவர் இந்த ஒட்டுமொத்த சீரிஸிலும் ஒரே ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதிக ரன்களையும் அள்ளிக் கொடுத்துள்ளார். மூன்றாவது போட்டியில் புவனேஷுக்குப் பதிலாக தீபக் சஹார் இறக்கப்பட்டது சரியே. என்னைக் கேட்டால் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்தே புவனேஷை விலக்கி வைக்கலாம். மற்ற போட்டிகளில் அவரது பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தால் அணிக்கு அவர் பங்களிப்பை பெற வாய்ப்புள்ளது.

அதனால், ஒருநாள் போட்டிகளில் இனிமேல் புவனேஷுக்குப் பதிலாக தீபக் சஹாரை நிரந்தரமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.

புவி இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல பங்களிப்பு கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளர். அவருடைய யார்கர்கள் ப்ரில்லியன்ட் வகையறா. அவாருடைய ஸ்லோவான டெலிவரிக்களும் அப்படித்தான். ஆனால், அவை இப்போது எடுபடவில்லை. நமது ஸ்டைலை மற்றவர்கள் படித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒருகட்டத்தில் நம்மை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடுவார்கள். அதனால், புவனேஷுக்கு மாற்று கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஒயிட் வாஷான இந்தியா: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதனால், டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இருந்து விராட் கோலி விலகினார்.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கோட்டைவிட்டது. கடைசி மூன்று ஓவர்களில் வெறும் 10 ரன் தான் தேவை, 3 விக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளது என்ற நிலையிலும் கூட 48வது ஓவரின் முதல் பந்தில் சஹார் அவுட் ஆனார். இன்னும் 5 ரன்கள் தான் தேவை என்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியுற்று ஒயிட்வாஷான இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x