Published : 20 Jan 2022 05:28 PM
Last Updated : 20 Jan 2022 05:28 PM

பந்துவீச வாய்ப்பு தராவிட்டால் ஏன் வெங்கடேஷை எடுத்தீர்கள்?- கே.எல்.ராகுலுக்கு சுனில் கவாஸ்கர் கேள்வி

வெங்கடேஷ் அய்யர் | படம் உதவி: ட்விட்டர்.

பார்ல்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச வாய்ப்பு தரப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டால், ஏன் வெங்கடேஷ் அய்யரைத் தேர்வு செய்ய வேண்டும், கூடுதலாக பேட்ஸ்மேனைத் தேர்வு செய்திருக்கலாமே என்று இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்ல் நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். 6 பந்துவீச்சாளர்களைக் கொண்டு இந்திய அணி நேற்று களமிறங்கியபோதிலும், ஏனோ ஆல்ரவுண்டர் வெங்கேடஷுக்கு வாய்ப்பு வழங்காமல் ராகுல் நிராகரித்தார் எனத் தெரியவில்லை.

6-வது பந்துவீச்சாளராக வெங்கடேஷ் இருந்தும் அந்த வாய்ப்புக்கே செல்லாமல் ராகுல் இருந்தார். தென் ஆப்பிரிக்க கேப்டன் புமா-டூசென் பார்ட்னர்ஷிப்பைப் பிரிக்க முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டபோது தாராளமாக 6-வது பந்துவீச்சாளர் வாய்ப்புக்குச் சென்றிருக்கலாம்.

ஆனால், ஏன் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரியவில்லை. பார்ட்னர்ஷிப்பைப் பிரிக்க முடியாத தருணங்களில் கோலியின் கேப்டன் அணுகுமுறையிலிருந்து ராகுல் கற்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடக்க இருக்கும் நிலையில் 6-வது பந்துவீச்சாளரைத் தேர்வு செய்தால் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனோடு களமிறங்கலாம் என சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டாக் நிகழ்ச்சியில் பேசியதாவது:

''வெங்கடேஷுக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்பதற்கான காரணம் கேப்டனுக்கு மட்டும்தான் தெரியும். புதிய வீரர் வெங்கடேஷ், கடந்த 5 மாதங்களாக இவரின் ஆட்டம் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஏன் அவரை இந்திய அணியில் வைத்திருக்கிறீர்கள். எதிரணியில் இருப்பவர்கள் வெங்கடேஷ் பந்துவீச்சு பற்றித் தெரியாதவர்கள், ஐபிஎல் தொடரில் யாரும் ஆடாத நிலையில் நிச்சயமாக வெங்கடேஷ் பந்துவீச்சைப் பயன்படுத்தியிருக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவில் புமா, டூசென் வலுவான கூட்டணி சேர்ந்தபோது அவர்களைப் பிரிக்க வெங்கடேஷ் அய்யருக்கு 2 ஓவர்களை வழங்கியிருக்கலாம். வலுவான பார்ட்னர்ஷிப்பை உடைக்க இதுபோன்ற பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திப் பிரிக்கலாம். நிச்சயமாக ஓவர் கொடுத்திருந்தால் ஏதாவது நடந்திருக்கும். 20 முதல் 25 ரன்கள்வரை வெங்கடேஷ் கொடுத்தாலும் நிச்சயமாக ஒரு மாறுதலாக இருந்திருக்கும்.

சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பந்துவீசியதால் வெங்கடேஷுக்கு வழங்கவில்லை என்று ஷிகர் தவண் விளக்கம் அளித்தார். நான் கேட்கிறேன், அஸ்வின், சஹல் இருவரும் சேர்ந்து 20 ஓவர்கள் வீசி 106 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்தான் வீழ்த்தியுள்ளார்கள். இது நன்றாகப் பந்துவீசியதற்கு அர்த்தமா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பார்ட்னர்ஷிப் எதிரணியில் வலுவாக ஏற்படும்போது, அவர்கள் சந்திக்காத பந்துவீச்சாளரைப் பந்துவீசச் செய்து விக்கெட்டை வீழ்த்துவது வழக்கம். இதுபோன்று ஷிவம் துபேக்கும் நடந்தது. அவரும் இதேபோன்று அணியில் இடம் பெற்று பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் வாய்ப்பு பெறவில்லை.

வெங்கடேஷுக்குப் பந்துவீச வாய்ப்பு தராதது பற்றி அணியிடம் இருந்து தெளிவான விளக்கம் இல்லை. வெங்கடேஷுக்கு ஒரு ஓவர் கூட தராமல், அப்படி என்ன திட்டத்தை அணியின் கேப்டன் வைத்திருந்தார், நிலைப்பாடு வைத்திருந்தார்?''.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x