Published : 12 Apr 2016 04:03 PM
Last Updated : 12 Apr 2016 04:03 PM

யார்க்கர்கள், வேகம் குறைந்த பந்துகள் எனக்கு உதவுகின்றன: குஜராத் வீரர் பிராவோ

மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2016 கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியதில் டிவைன் பிராவோவின் பந்துவீச்சு முக்கியப் பங்களிப்பு செய்தது.

மேலும் நேற்றைய 4 விக்கெட்டுகளுடன் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் பிராவோ.

அதிரடி வீரர்களான மேக்ஸ்வெல் (2), டேவிட் மில்லர் (15) ஆகியோரை தனது 12-வது ஒவரில் வீழ்த்திய பிராவோ பிறகு விருத்திமான் சஹா, ஸ்டாய்னிஸ் ஆகியோரையும் கடைசி ஓவரில் வீழ்த்தினார். இதனால் 12 ஓவர்களில் 101/2 என்று வலுவாகச் சென்று கொண்டிருந்த கிங்ஸ் லெவன் அணி கடைசி 8 ஓவர்களில் 60 ரன்களையே எடுக்க முடிந்தது, அந்த அணி குறைந்தது 180 ரன்களையாவது எடுத்திருக்கும்.

காரணம் தொடக்கத்தில் முரளி விஜய் (42, 5 பவுண்டரி 1 சிக்சர், 34 பந்துகள்), மனன் வோரா (38, 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள், 28 பந்துகள்) ஆகியோர் அருமையான அதிரடி தொடக்கத்தில் 9-வது ஓவர் தொடக்கத்தில் 72 ரன்கள் என்ற அதிரடி தொடக்கத்தைக் கொடுத்ததே. ஆனால் வோரா, விஜய் இருவரையுமே ஜடேஜா வீழ்த்தினார். அதன் பிறகே பிராவோ புகுந்தார், இதனையடுத்து விருத்திமான் சாஹா 20 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 33 ரன்களையும் எடுக்க இருவரும் இணைந்து 7.3 ஓவர்களில் 5-வது விக்கெட்டுக்காக 55 ரன்களைச் சேர்த்தனர், இதனால் பஞ்சாப் அணி 161/6 என்ற ஸ்கோரை எட்டியது.

பிராவோ 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பிரவீண் குமார் 4 ஓவர்களில் 25 ரன்களையே கொடுத்து சிக்கனம் காட்டினார். சாங்வான், ஜேம்ஸ் பாக்னர் சோபிக்கவில்லை.

தொடர்ந்து ஆடிய ரெய்னா தலைமை குஜராத் லயன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 162/5 என்று மிக எளிதாக வென்றது. மெக்கல்லம் தான் எதிர்கொண்ட 2-வது பந்திலேயே மேலேறி வந்து மிதவேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா பந்தில் சஹாவிடம் ஸ்டம்ப்டு ஆனார். ஆனால் ஏரோன் பிஞ்ச் 47 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்களை வெளுத்துக் கட்டினார். ரெய்னா 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 ரன்கள் எடுக்க தினேஷ் கார்த்திக் அருமையாக ஆடி 26 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆட்ட நாயகனாக பிஞ்ச் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டி குறித்து பிராவோ கூறும்போது, “மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோர் அபாயகரமான வீரர்கள், இவர்கள் விரைவில் பெவிலியன் திரும்புவதை எந்த ஒரு எதிரணியும் விரும்பும். மில்லர் நன்றாகத் தொடங்கினார். மேக்ஸ்வெல் எவ்வளவு அபாயகரமான வீரர் என்பதை நாம் அறிவோம். அதனால் அவருக்கு சில ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை பின்னங்காலுக்கு நகர்த்தினேன். நான் எனது யார்க்கரை நன்றாக வீசினேன், மில்லர் விக்கெட்டை வேகம் குறைந்த பந்தினால் கைப்பற்றினேன். இந்த 2 பந்துகள் எனக்குச் சாதகமாக அமைய ஆட்டமும் எங்கள் பக்கம் திரும்பியது.

என் அணிக்காக பங்களிப்பு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிட்சும் நல்ல பிட்ச். விக்கெட்டுகளை வீழ்த்தவே முதலிலிருந்தே முயற்சி செய்தேன். கொஞ்சம் ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் அச்சுறுத்த முயற்சி செய்தேன், பிறகு வேகம் குறைந்த பந்துகள் கைகொடுத்தன. ஒட்டுமொத்தமாக நாங்கள் துரத்த வசதியான ஒரு இலக்குக்கு அவர்களை மட்டுப்படுத்திய விதத்தில் இது ஒரு நல்ல பவுலிங் முயற்சி என்றே கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x