Published : 19 Jan 2022 03:12 PM
Last Updated : 19 Jan 2022 03:12 PM

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி மீது அழுத்தம்: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக விராட் கோலி மீது அழுத்தம் இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார்.

நான்கே மாதங்களில் இந்தியாவின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். முதலில் செப்டம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். அதற்கடுத்த சில நாட்களிலேயே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் கேப்டன் பதவியையும் துறந்தார்.

டிசம்பர் முதல் வாரத்தில், பிசிசிஐ அவரை ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டன்சியில் இருந்தும் நீக்கியது. என்றாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார் என்று பலர் எதிர்பார்த்தபோது சில தினங்கள் முன் அதிலிருந்தும் விலகினார். விராட் கோலி இந்த முடிவு எடுப்பதற்கு முன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன்.

இது தொடர்பாக அதுல் வாசன் கூறுகையில், "ஆஸ்திரேலியத் தொடருக்கு இடையே, தோனி ஓய்வு முடிவை அறிவித்தபோது எனக்கு அது அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால், விராட் கோலியின் முடிவு எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக கோலி மீது அழுத்தம் இருந்தது என்று நினைக்கிறேன். அவர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. அணியின் தோல்விக்கு அவர் மற்ற வீரர்களைச் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கு இதற்கு முன்பு அவரிடம் கிடையாது.

சமீபகாலமாக அவரது பேட்ஸ்மேன்ஷிப் குறைந்துவிட்டது. என்றாலும் டெஸ்ட் கேப்டன் பதவி வேண்டாம் என்ற அவரின் முடிவு, ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை பிசிசிஐ நீக்கியதால் எடுத்திருக்கலாம். டி20 கேப்டன் பதவி வேண்டாம் எனச் சொன்னது சரியான முடிவு. டி20 அணிக்கான பொறுப்பில் இருந்து விலகியதும், ஒருநாள் கேப்டன் பதவியை இழக்க நேரிடும் என்று கோலி ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதே அவரது குறிக்கோளாக இருந்தது. உலகக் கோப்பையில் அணியை வழிநடத்துவதுதான் அனைவரின் நோக்கமாக இருந்திருக்கும்.

அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பிறகே, அனைத்திலும் இருந்து விலகி தனது பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஒவ்வொரு வீரரும் இதுபோன்ற நிலையைக் கடந்து செல்வார்கள். அதுதான் இப்போது கோலிக்கும் நிகழ்ந்துள்ளது. ஒன்று மட்டும் தெளிவாகிறது, கோலி கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக நிறைய அழுத்தங்களைச் சந்தித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x