Last Updated : 16 Jan, 2022 02:29 PM

 

Published : 16 Jan 2022 02:29 PM
Last Updated : 16 Jan 2022 02:29 PM

அடுத்தது யார்?: திராவிட்டை தவிக்க விட்ட கோலி: காத்திருக்கும் சவால்கள் என்ன?

பயிற்சியாளர் ராகுல் திராவிட், விராட் கோலி | கோப்புப்படம்


இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகிவிட்டார், அவரின் சகாப்தம் முடிந்துவிட்டதாகக் கூறலாம் ஆனால், தலைமைப்பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்குத்தான் இனிமேல் கடினமான, இமாலயப் பணிகள் காத்திருக்கின்றன.

இனிமேல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வெற்றிகளைக் குவிக்கும் அணியாகஇந்திய அணியை வலுவாகத் தயார் செய்ய வேண்சிய சவாலான பொறுப்பு திராவிட்டிடம் வந்திருக்கிறது.

இந்திய அணியின் கேப்டனாக 2014ம் ஆண்டு கோலி நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 7 ஆண்டுகள் சிறப்பாக் செயல்பட்ட கோலி தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன்களில் கிரேம் ஸ்மித், ஸ்டீவ் வாஹ் , ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தார்போல் கோலிதான் இருக்கிறார். இன்னும் பல சாதனைகளை கோலியால் படைத்திருக்க முடியும் என்றாலும் அதற்கு காலமும், இயற்கையும், சூழல்களும் ஒத்துழைக்காததால், கேப்டன் பதவியிலிருந்து கோலி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது இந்திய அணி, பிசிசிஐ, தலைமைப்பயிற்சியாளர், தேர்வுக்குழுவினர் முன் இருக்கும் ஒற்றைக் கேள்வி அடுத்த கேப்டன் யார், இந்தியஅணியை யார் வழி நடத்தப் போகிறார் என்பதுதான். அதிலும் கோலி அளவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வெற்றிகளைக் குவிக்கும் அணியாக மாற்றப் போவது யார் என்பது சவாலான பணி, சரியான வீரரைத் தேர்ந்தெடுப்பது அதைவிட முக்கியமானது.

ரோஹித் சர்மா இருக்கிறாரே என்று எளிதாகக் கூறிவிடலாம். ரோஹித் சர்மாவுக்கு தற்போது 34வயதாகிறது. உடல்தகுதியிலும் ரோஹித் சர்மா முழுமையாக இல்லை காயத்தால் அடிக்கடி அவதிப்படுவதும், ஓய்வெடுப்பதுமாக இருப்பதால், ரோஹித் சர்மாவிடம் பொறுப்பை வழங்குவதில் சிக்கல் இருக்கிறது

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கே துணைக் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு, காயத்தால் விலகினார். இதனால் கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை வழிநடத்தினார்.

கடந்த 2 ஆண்டுகளாக கே.எல்.ராகுல் பேட்டிங்கில் நிலைத்தன்மையுடன் இருந்தாலும், கேப்டன் பொறுப்பில் அதிலும் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் இல்ைல. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்க கேப்டனாக இரு சீசன்களில் கே.எல்.ராகுல் இருந்தபோதிலும் அணி வீரர்களை சரியாகநிர்வகிக்க முடியாததால், பெரியஅளவிலான வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை.ஆதலால், கேப்டன் பதவியை ராகுலிடம் வழங்கினாலும், இந்தியஅணி தொடக்கத்தில் பல இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும்.

அடுத்ததாக ரிஷப் பந்த்.விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக வர வேண்டுமென்றால், இவர்தான் சரியான தேர்வு. இளம் வீரராக இருந்தாலும் கிரிக்கெட்டில் பல்வேறு நுணுக்கங்களை அறிந்தவராகவும், தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கில் கலக்கும் நபராகவும் ரிஷப் பந்த் இருக்கிறார்.

இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் எதிர்காலத்தில் ஸ்திரமாக இருக்க ரிஷப் பந்த் சரியான தேர்வாக இருப்பார், ஏர்கெனவே 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ரிஷப்பந்த்தை கையாண்டு திராவிட்டுக்கு அனுபவம்இருப்பதால், இந்தியஅணியை அடுத்தகட்ட மாற்றத்துக்கு தயார் செய்வதில் திராவிட்டுக்கு பெரிய அளவிலான சிரமம் இருக்காது.

கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த கோலி, “ மாற்றம் வலுக்கட்டாயமாக வரக்கூடாது இயல்பாக நடக்க வேண்டும்” என்றார். உண்மைதான், ஆனால், விராட்கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகல் என்பது, ரஹானே, புஜாராவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக, மாற்றம் வலுக்கட்டாயமாக நடந்துள்ளது

ரவி சாஸ்திரி, கோலி சகாப்தம் முடிவுக்குவந்துவிட்டது. இனிமேல், இந்திய அணியை எவ்வாறு மாற்றப் போகிறார், எந்த மாதிரி வீரர்கள் கொண்ட அணியாக திராவிட் மாற்றப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிலும் உள்நாட்டில் எந்த அணியையும் வீழ்த்தும் சிங்கமாக இந்திய அணி இருந்திருக்கிறது, அதைத் தக்கவைக்க வேண்டும், அதேபோல வெளிநாட்டுப் பயணிகளில் இந்திய அணிகோலி தலைமையில் பல வெற்றிகளைக் குவித்திருக்கிறது. அந்த வெற்றியின் சுவடுகள் மாறாமல் காப்பாற்ற வேண்டிய கடமைகள் திராவிட்டுக்கு இருக்கிறது. அதற்கு உகந்த கேப்டன், வீரர்களைத் தயாரிப்பதும், தேர்வு செய்வதும் திராவிட்டுக்குசவாலானதாகும்.

டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரஹானே கதைக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இருவரின் இடத்துக்கும் ஸ்ரேயாஸ் அய்யர்,ஹனுமா விஹாரி, சூர்யகுமார்யாதவ், ஷுப்மான் கில் , பஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை தயார் செய்ய வேண்டிய கடமையும் திராவிட்டுக்கு இருக்கிறது. அணியின் கேப்டனாக கோலி இல்லாவிட்டாலும் பேட்டிங் பிரிவை வழிநடத்துவதில் அனுபவம் வாய்ந்தவராக கோலி மட்டுமே இருப்பதால்,அவருக்கும் கூடுதல் பொறுப்பு இதில் இருக்கிறது.

ராகுல் திராவிட்டின் பயிற்சியாளர் பணி என்பது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனமாக இல்லை, முற்கற்கள் நிறைந்ததாக இருக்கிறது. இதை எவ்வாறு களைந்து சிம்மாசனத்தில் திராவிட் அமரப்போகிறார் என்பதில் அவரின் திறமை இருக்கிறது. தான் விளையாடும் காலத்தில் களத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து தாக்குப்பிடித்த திராவிட், இந்திய அணியைத்தயார் செய்வதிலும் தன்னுடைய எதிர்த்துப் போராடும் குணத்தை வெளிப்படுத்தி தயாராக வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் கோலி கேப்டன் பதவியை விட்டுச் செல்லவில்லை, ஏராளமான பொறுப்புகளை திராவிட்டுக்கு விட்டுச்சென்றுள்ளார். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள், கோலியின் கேப்டன்ஷி நிச்சயமாக இனிவரும் காலங்களில் உணரப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x