Published : 16 Jan 2022 11:46 AM
Last Updated : 16 Jan 2022 11:46 AM

தலைநிமிர்ந்து செல்லுங்கள்; சாதனைகள் செய்திருக்கிறீர்கள்: விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்

விராட் கோலி | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் மோசமான தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

7 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திச்சென்ற கோலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்தில் பல்வேறு குறிப்பிடத்தகுந்த, மறக்க முடியாத வெற்றிகளை அணிக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே அதிகமான வெற்றிகளைடெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமை கோலிக்கு மட்டும்தான் உண்டு.

ரவி சாஸ்திரி

கோலியுடன் அதிகமான நட்பும், நெருக்கமாகவும் இருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட்டரில் கோலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “விராட், தலைநிமிர்ந்து கவுரவமாக, துணிச்சலாகச் செல்லுங்கள். கேப்டனாக நீங்கள் செய்த சாதனைகளை உலக கிரிக்கெட்டில் சிலர்தான் செய்துள்ளார்கள். இந்திய அணியின் வெற்றிகரமான, ஆக்ரோஷமான கேப்டன் உறுதியாக நீங்கள்தான். இருவரும் சேர்ந்து அணியைக் கட்டமைத்த நிலையில் இந்தச் செய்தி எனக்கு உண்மையில் வருத்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸ்

மே.இ.தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில். “இந்திய கேப்டனாக இருந்து அதிரவைக்கும் ரன்களை எடுத்தமைக்கு வாழ்த்துகள். இதுவரை நீங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்படுங்கள், உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக உங்கள் பெயர் வரும்” எனத் தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா

முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் விடுத்த செய்தியில், “விராட் கோலியின் திடீர்் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் முடிவை மதிக்கிறேன். இந்திய கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட்டும் அவர் செய்த பணிகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். உடற்தகுதி மிக்க வீரர், ஆக்ரோஷமான வீரர் கோலி. அடுத்து அணியில் ஒரு வீரராக அவர் ஒளிர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர்

வாசிம் ஜாபர் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் பொறுப்பேற்றபோது, இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்றதே சாதனைதான். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அவர் தலைமையில் தொடரை இழந்தது வேதனைதான். இத்தனை ஆண்டுகாலம் இந்திய அணியை வழிநடத்தி வந்தது, அவரின் பாரம்பரியம். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

சேவாக்

வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டமைக்கு வாழ்த்துகள் விராட் கோலி. புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது, இந்திய அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் கோலிதான். உலக அளவில் அதிகமான வெற்றிகளைப் பெற்றவரும் கோலிதான். பெருமையாக இருக்கிறது கோலி, இன்னும் நீங்கள் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதைப் பார்க்க விரும்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் முகமது அசாருதீன் கூறுகையில், “இளம் இந்திய அணியை வழிநடத்துவதே மிகப்பெரிய பெருமைதான். அந்த கேப்டன் பதவியிலிருந்து விலகுவது உணர்ச்சிகரமான, மனதுக்கு கனமான செயல். உங்கள் பயணம் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

இர்பான் பதான்

இர்பான் பதான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் கேப்டன்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் நீங்கள் வருவீர்கள். கோலியின் பெயர் உச்சரிக்கப்படும். வெற்றிகளுக்காக மட்டும் உங்கள் பெயர் அல்ல, நீங்கள் கேப்டனாக ஏற்படுத்திய தாக்கத்தால் உச்சரிக்கப்படுவீர்கள். நன்றி விராட் கோலி” எனத் தெரிவித்தார்.

சச்சின், யுவராஜ் சிங்

சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தமைக்கு வாழ்த்துகள் கோலி. அணிக்காக எப்போதுமே 100 சதவீதம் உழைப்பை வழங்கியிருக்கிறீர்கள், முயன்றீர்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவிடுகையில், “கிங் கோலியின் பயணம் மறக்க முடியாதது. நீங்கள் சாதித்ததை சிலர்தான் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உண்மையான சாம்பியன் போன்று விளையாடி அனைத்தையும் கொடுத்தீர்கள். இன்னும் வலிமையாக வர வேண்டும், உயரே செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இசாந்த் சர்மா

இசாந்த் சர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில். “ஓய்வறையில் பல நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும், நீங்கள் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. அணியில் மட்டுமல்ல குழந்தைப் பருவம் தொட்டு நாம் ஒன்றாக இருந்தோம். ஒருபோதும் உங்களை நாங்கள் கேப்டனாகக் கருதியதில்லை. 100 போட்டிகளை இந்தியாவுக்காக ஆடியிருக்கிறேன். ஆழ்மனதில் இருந்துதான் அனைவரும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்.

2017-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரின் போது, என்னிடம் நீங்கள் , இந்த முறை தொடரை வெல்ல வேண்டும் என்று கூறினீர்கள் என்பது நினைவிருக்கிறது. ஆனால் நாம் வெல்லவில்லை, ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர்கள் மண்ணில் அவர்களைத் தோற்கடித்தோம். இங்கிலாந்தில் 2017-18 தொடரை இழந்தாலும், இந்த முறை தொடரை வெல்லும் நிலைக்குச் சென்றோம். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் நீங்கள்தான், கேப்டனாக இனிய நினைவுகளை வழங்கியமைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x