Last Updated : 15 Jan, 2022 09:54 AM

 

Published : 15 Jan 2022 09:54 AM
Last Updated : 15 Jan 2022 09:54 AM

ரஹானே, புஜாராவால்தான் இந்திய அணி தோற்றது: அடுல் வாசன் காட்டம்

புஜாரா, ரஹானே | கோப்புப்படம்

புதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாராவின் மோசமான பேட்டிங் காரணமாகத்தான் இந்திய அணி தோற்றது. அவர்களுக்கான வாய்ப்புக் கதவு மூடப்பட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அடுல் வாசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோதிலும் அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைக் கோட்டைவிட்டது.

பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தபோதிலும், பேட்டிங்கில் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே, கோலி, அகர்வால் போன்றோரின் பொறுப்பற்ற பேட்டிங்கால்தான் வெற்றி கைநழுவியது.

தென் ஆப்பிரிக்கத் தொடர் முழுவதுமே புஜாரா, ரஹானேவுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆதலால், அச்சப்பட்டு ஓரளவுக்கு ஸ்கோர் செய்வார்கள் என எதிர்பார்த்த தேர்வாளர்களுக்கு ஏமாற்றியமே மிஞ்சியது.

மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே மீதான அனைத்து நம்பிக்கைகளும் தூள்தூளாக நொறுங்கிவிட்டன. முதல் டெஸ்ட்டில் ரஹானே (48,20), புஜாரா(0,16) 2-வது டெஸ்ட்டில் ரஹானே (0,58), புஜாரா(3, 53), 3-வது டெஸ்ட்டில் ரஹானே (9,1), புஜாரா (43,9) ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஒட்டுமொத்தத்தில் ரஹானே (136 ரன்கள், சராசரி 22), புஜாரா (154) ரன்கள் சேர்த்துள்ளனர்.

ரஹானே, புஜாரா இருவரையும் அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன.

முன்னாள் வீரர் அடுல் வாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இந்திய வீரர்களின் பேட்டிங்கைப் பார்த்து வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்திய அணியிடம் இருந்து இதுபோன்ற கோழைத்தனமான ஒரு போராட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

அதேநேரம் தென் ஆப்பிரிக்க அணி பல்வேறு இடர்களிலிருந்து மீண்டு வருகிறது என்பதற்கு நல்ல அறிகுறியாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்த்து ஆதிக்கம் செய்ய தென் ஆப்பிரிக்க அணி தொடங்கிவிட்டது. இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது.

இதுவரை எந்தத் தொடரையும் வெல்லவில்லை, இந்தத் தொடரையும் இழந்துவிட்டோம் என்பது வேதனையாக இருந்தாலும், தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் இருந்தபோதே இந்திய அணி எந்த இடத்தில் நிற்கிறது என்பதை ராகுல் திராவிட் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். இந்திய அணியின் பலவீன பேட்டிங் குறித்து ராகுல் திராவிட் நிச்சயம் சிந்தித்திருப்பார். ஆனால், தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர், குறிப்பாக பீட்டர்ஸன், பும்மா ஆகியோர் அருமையாக ஆடினர். இருவரும்தான் பேட்டிங் துறைக்கு பக்கபலமாக இருந்தனர், வெளிநாடுகளிலும் உறுதுணையாக இருந்து சிறப்பாக ஆடுகிறார்கள்.

இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா போதுமான பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு இருவரும் முக்கியக் காரணம். இருவருக்கும் வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. 40 ரன்களும், 50 ரன்களும் நிச்சயமாக அணியின் வெற்றிக்கு உதவாது. இந்த டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்களால்தான் இந்திய அணி தோற்றது. பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவும், டிபெண்ட் செய்யவும் போதுமான ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுக்கவில்லை.

டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகச் சென்றது, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் அடித்தார்கள், இந்திய பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளாக என்ன நடந்தததோ அதுதான் நடந்தது. தோல்விக்கு புஜாரா, ரஹானேதான் முக்கியக் காரணம்''.

இவ்வாறு அடுல் வாசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x