Last Updated : 10 Jan, 2022 05:13 PM

 

Published : 10 Jan 2022 05:13 PM
Last Updated : 10 Jan 2022 05:13 PM

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்குமா இந்திய அணி? - கேப்டவுன்னாலே ‘டவுன்’தான்; தென் ஆப்பிரிக்காவின் அசைக்க முடியாத பின்னணி

இசாந்த் சர்மா

கேப்டவுன்: கேப்டவுனில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுவரை கேப்டவுனில் இந்திய அணிவென்றதே இல்லை. மற்றொரு விஷயம், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. ஆகவே, 3-வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதேசமயம், கேப்டவுனை தனது கோட்டையாக மாற்றிவைத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்த மைதானத்தில் பல ஜாம்பவான் அணிகளை எல்லாம் மண்ணைக் கவ்வ வைத்துள்ளதால், வரலாறு தென் ஆப்பிரிக்காவுக்கே சாதகமாக இருக்கிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. நாளை நடக்கும் போட்டியில் வென்றால் இந்தியாவுக்கு மிகப் பெரிய வரலாறாக மாறும், தென் ஆப்பிரிக்க அணிக்கு வழக்கமான டெஸ்ட் தொடர் வெற்றிதான்.

இந்திய அணியைப் பொறுத்தவரை நாளைய ஆட்டத்தில் கோலி அணிக்குள் வருவது கூடுதல் பலம். சிராஜுக்கு காயத்தால் விளையாடமாட்டார் என்பதால், அவருக்குப் பதிலாக இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இருவரில் யாரை எடுத்துவரப் போகிறார்கள் என்பதும் எதிர்பார்ப்பு. கேப்டவுன் நியூலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி என்பதால், இசாந்த் சர்மா போன்ற உயரமான பந்துவீச்சாளர்கள் எளிதாக பவுன்ஸர்களையும், ஷாட்பந்துகளை வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

ஆனால், இசாந்த் சர்மா வயதான கறுப்புக்குதிரை என்பதை மறக்கக்கூடாது. எந்தநேரத்திலும் அவர் காயத்தால் திடீரென அமர்ந்துவிடுவார் என்பதால், உடல்ரீதியாக அவர் தகுதியைப் பற்றி ஆய்வு செய்தபின்புதான் களமிறங்குவார்.

விராட் கோலிக்கு நாளை 99-வது டெஸ்ட் போட்டியாகும். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது ஒருமுறை கூட எந்த கேப்டனும் டெஸ்ட் தொடரை வென்று நாடு திரும்பியதாக வரலாறு இல்லை. இதுவரை நியூலாந்து மைதானத்தில் இந்திய அணி கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது.

இதில் 1997-ம் ஆண்டு, 2007, 2018-ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது; இருமுறை சமன் செய்திருக்கிறதே தவிர வெற்றி பெறவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை, கடந்த 1889-ம் ஆண்டிலிருந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இதுவரை 58 டெஸ்ட் போட்டியளில் கேப்டவுனில் விளையாடிய தென் ஆப்பிரிக்கஅணி 26 வெற்றிகளையும் 21 தோல்விகளையும் சந்தித்துள்ளது, 11 போட்டிகளை டிரா செய்திருக்கிறது. நிறவெறித் தடைக்குப் பின் கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டவுனில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 23 வெற்றிகளைப் பெற்றுள்ளது, 5 தோல்விகளையும், 6 போட்டிகளை டிராவும் செய்திருக்கிறது.

நியூலாந்தில் நாளை நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் 2ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் டெஸ்ட் போட்டியாகும். நியூஸிலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு செல்லப்பிள்ளயைாகும். பந்துகள் நன்றாக பவுன்ஸாகும், ஷாட் பந்துகள் அதிகம் வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ரபாடா, ஆலிவர், ஜேஸன் ஆகியோருக்கு ஏற்ற மைதானமாகும்.

இந்திய அணி நாளை ஒருவேளை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்களுக்கு மேல் அடிப்பதுதான் ஓரளவுக்கு பாதுகாப்பான ஸ்கோராக இந்த மைதானத்தில் இருக்கும். அதிலும் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகிய மூவரும் சமீபத்தில் எந்த சதமும் அடிக்கவில்லை என்பதால் இவர்களின் பேட்டிங் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விராட் கோலி கடந்த முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியாக 4-வது ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்தை கவர் டிரைவ் ஷாட் அடிக்க முற்பட்டுத்தான் ஆட்டமிழந்தார்.

இதேபோன்ற தவறை சச்சின் செய்தபோது, 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில் சிட்னி மைதானத்தில் தான் இரட்டை சதம் அடிக்கும் வரை பிரட் லீயின் பந்தை ஆஃப் திசையிலும், கவர்டிரைவ் ஷாட்டும் அடிக்கவில்லை. அந்த கட்டுக்கோப்பு விராட் கோலியிடம் இல்லாததே பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாமைக்கு காரணம். ஆதலால் 4-வது டெஸ்ம்புக்கு வெளியே செல்லும் பந்தை கோலி லீவ் செய்து பழக வேண்டும், அதற்குரிய பயிற்சியை கடந்த சில நாட்களாக எடுத்துள்ளார்.

விராட் கோலி கடந்த டெஸ்டில் இல்லாத சூழலில் ஹனுமா விஹாரி தனக்குரிய பங்கை சிறப்பாகச் செய்தார். கோலி அணிக்குள் வந்தவுடன் அவரை அமரவைப்பது நியாயமற்றது என கம்பீர் கூட கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக மூத்த வீரர்களான ரஹானே, புஜாரா இருவரில் ஒருவருக்கு ஓய்வளிக்கலாம். ஆனால், அனுபவ பேட்ஸ்மேன்கள் தேவை என்ற ரீதியில் ப்ளேயிங் லெவனில் இடம்பெறவும் வாய்ப்புண்டு. ஒருவேளை இருவரும் இருந்தால், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் கூர்மையான பவுன்ஸர்களை எதிர்கொள்ள நேரிடும்.

கடந்த 2001-ம் ஆண்டு டெஸ்ட் தொடர் அனைவருக்கும் விருந்தாக இருந்திருக்கும். வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கும் , சச்சினுக்கும் எழுந்த போட்டி ஸ்வாரய்ஸமானது. சச்சினை திணறடிக்கும் நோக்கில் ஸ்டெயின் வீசிய பல பவுன்ஸர்கள், பல பவுன்ஸர்களை சச்சின் சிக்ஸருக்கும், பவுண்டருக்கு பறக்கவிட்டதை மறக்க முடியாது. அதுபோன்று இப்போதிருக்கும் அணியில் நடக்குமா என்பது கற்பனைக்கு எட்டாததுதான்.

ரிஷப் பந்த் ஷாட் தேர்வு கடந்த டெஸ்டில் பெரும் விவாதமாக எழுந்து. அது குறித்து அவரிடம் பேசுவதாக பயிற்சியாளர் திராவிட் தெரிவி்த்திருந்தார். ஆனால், புஜாரா, ரஹானேயின் பேட்டிங் தோல்விகள் குறித்து பேச்சுகள் எழும்போது அவர்களுக்கு பின்னால் சென்று ரிஷப் பந்த் ஒளிந்து கொள்கிறார் என்பதுதான் உண்மை.

ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் ரிஷப் பந்த் எந்தவிதமான பெரிய இன்னிங்ஸும் ஆடவில்லை என்பதே நிதர்சனம். அக்ரவால், ராகுல் நல்ல தொடக்கம் தருவதால் அவர்கள் மாற்றப்பட வாய்ப்பில்லை. பந்துவீச்சில் முகமது சிராஜுக்குப் பதிலாக பெரும்பாலும் இசாந்த் சர்மா வருவதற்கே வாய்ப்புள்ளது.

பும்ரா, ஷமி கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலுமே தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி தரும் விதத்தில்தான் பந்துவீசினர். ஆனால் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களால் 13 விக்கெட்டுகளேயே கைப்பற்ற முடிந்தது என்பது பந்துவீச்சில் ஏற்பட்ட தொய்வையே குறிக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணியில் டீ காக் இல்லாத நிலையில் அணி பலவீனமாகும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக கடந்த 2-வது டெஸ்டை வென்று காட்டியிருக்கிறது. கேப்டன் எல்கர், டூசென், பீட்டர்ஸன், டெம்பா புமா ஆகியோர் அணிக்கு தூண்களாக இருக்கிறார்கள். இவர்களின் விக்ெகட்டை இந்திய அணி வீழ்த்திவிட்டாலே சரிவு உறுதியாகிவிடும். பந்துவீச்சில் ரபாடா, இங்கிடி, ஆலிவர், ஜேஸன், ஆகியோர் நிச்சயம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள். இவர்களின் பவுன்ஸர்களை சமாளித்து விக்கெட்டை இழக்காமல் விளையாடுவது மிக முக்கியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x