Published : 09 Jan 2022 04:25 PM
Last Updated : 09 Jan 2022 04:25 PM

இப்படியெல்லாம் இருந்திருந்தால் தென் ஆப்பிரிக்காவில் எப்பவோ டெஸ்ட் தொடரை வென்றிருப்போம்: ஹர்பஜன் சிங் கருத்து

படம் உதவி ட்விட்டர்

ஜலந்தர்: இந்திய அணியில் வலுவான, உலகத்தரம் வாய்ந்த அதிகமான வேகப்பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு முன்பு இருந்திருந்தால் எப்போதோ டெஸ்ட் தொடரை வென்றிருப்போம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. வரும் 11-ம் தேதி கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் இருவரில் யார் டெஸ்ட் தொடரை வெல்லப்போகிறார்கள் என்பது தெரியவரும். இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை, ஒருவளை டெஸ்ட் தொடரை வென்றால் அது வரலாறாக மாறும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஜலந்தரில் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாங்கள் தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ பயணம் செய்தபோது, 145 கி.மீ. வேகத்தில் வீசக்கூடிய 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை. ஆனால், இன்று இந்திய அணியில் ஏராளமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

ஷமி, பும்ரா, சிராஜ், தாக்கூர் எனத் திறமையான, டாப்கிளாஸ் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதற்கு முன் இதுபோன்று டாப்கிளாஸ் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருந்திருந்தால், இந்திய அணி எப்போதோ தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கும். அதிகமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பாகும்.


2-வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியினர் சிறப்பாக விளையாடினர். அதனால் 2-வது டெஸ்ட்டை வெல்ல முடிந்தது. கேப்டவுனில் இந்திய அணி இன்னும் சிறப்பாக ஆடிய தொடரை வெல்வார்கள் என நம்புகிறேன்.

அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்க அணி வித்தியாசமான அணியாக, வலிமையான அணியாக இருந்தது. கேரி கிறிஸ்டன், ஹசிம் அம்லா, காலிஸ், டி வில்லியர்ஸ், டூப்பிளசிஸ், பவுச்சர் எனப் பல திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தனர். இப்போது இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியால் இந்தியாவை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணி வலுவாக இருக்கிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இது சரியான வாய்ப்பு என முன்பே தெரிவித்திருந்தேன். இந்திய அணியைத் தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான பேட்டிங் இல்லை''.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x