Published : 05 Jan 2022 07:36 PM
Last Updated : 05 Jan 2022 07:36 PM

`இதெல்லாம் அபத்தம்; பொறுப்போடு இருங்க'- ரிஷப் பந்த் செயலை விளாசிய கவாஸ்கர்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தின் பொறுப்பற்ற ஆட்டத்தை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 240 ரன்கள் இலக்கு வைத்துள்ளது. முன்னதாக மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை 58 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் ஆரம்பித்தது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரஹானே, புஜாரா இருவரும் இன்று தங்கள் ஆட்டத்தில் நிதானம் கடைபிடித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் எடுத்தனர்.

ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்தக் கூட்டணியை ரபாடா பிரித்த பிறகு ஆட்டம் தலைகீழானது. இருவரும் ரபாடாவின் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆக ஒருகட்டத்தில் 163/4 என்கிற நிலையில் இந்திய சிக்கலை சந்தித்தது. அப்போது அனைவரின் பார்வையும் ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பந்த் மீது தான் இருந்தது. குறிப்பாக ரிஷப் பந்த் இந்திய அணியை 200 ரன்களுக்கு மேல் கொண்டுசெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்திருந்த ரிஷப் அணியின் நிலையை உணர்ந்து பொறுமையை கடைபிடிக்காமல் ரபாடாவின் பந்துவீச்சை இறங்கி அடிக்க முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பூஜ்ஜியத்தில் நடையை கட்டினார். ரிஷப்பின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து சீனியர் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது விமர்சனத்தில், ``களத்தில் இருவருமே புது பேட்ஸ்மேன்கள். இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்து அணி தடுமாற்ற நிலையில் உள்ளது. அந்த நேரத்தில் ரிஷப் பந்த் இப்படி ஒரு ஷாட் அடிக்க வேண்டிய தேவையே இல்லை. நிச்சயம் அந்த ஷாட்டுக்கு மன்னிப்பே கிடையாது. இது அவரின் வழக்கமான ஷாட், இயல்பான ஆட்டம் என்ற அபத்தம் எல்லாம் தேவையில்லை.

அணி இந்த மாதிரியான தருணத்தில் இருக்கும் போது வீரருக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். புஜாராவும், ரஹானேவும் தங்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர். இருவரும் அடிவாங்கி விளையாடினார்கள். அதுபோன்ற பொறுப்பான ஆட்டத்தை ரிஷப் நீங்களும் வெளிப்படுத்த வேண்டும். அதை செய்யாமல், இப்படி தான் விளையாடுவேன் என்றால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து உங்களுக்கு ஆதரவான வார்த்தைகள் வராது ரிஷப்" என்று காட்டமாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x