Last Updated : 31 Dec, 2021 01:48 PM

 

Published : 31 Dec 2021 01:48 PM
Last Updated : 31 Dec 2021 01:48 PM

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல பொன்னான வாய்ப்பு: கேப்டன் விராட் கோலி பெருமிதம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம்

செஞ்சூரியன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த அணி என்பதற்கு செஞ்சூரியனில் கிடைத்த வெற்றிதான் சான்று என்று கேப்டன் விராட் கோலி பெருமிதம் அடைந்தார்.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

இதற்கு முன் 2 தோல்விகளை மட்டுமே இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா சந்தித்திருந்தது. தென் ஆப்பிரிக்காவிலேயே மிகவும் கடினமான மைதானமும் செஞ்சூரியன்தான். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெற்ற 4-வது வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றி குறித்து பிசிசிஐ டிவிக்கு கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

''தென் ஆப்பிரிக்காவில் எந்த மைதானத்திலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எளிதானது கிடையாது. அதிலும் செஞ்சூரியன் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே கடினமான ஆடுகளம். இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸமேன்களும் பந்துவீச்சாளர்களும் இரு இன்னிங்ஸ்களிலுமே சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள்.

முதல் டெஸ்ட் போட்டியில் 4 நாட்களில் நாங்கள் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியின் பலம், வீரர்களின் திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த சான்றாக அமைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தோம். நாங்கள் இப்போது விளையாடும் கிரிக்கெட் என்பது எந்த இடத்திலும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை வெற்றியாக மாற்றும் வகையில் விளையாடுகிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால், இந்த முறை அதை சாத்தியமாக்க பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1-0 என்று தொடக்கத்திலேயே இந்திய அணி அற்புதமான முன்னிலையோடு இருக்கிறது. எதிரணியினர் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். எங்களுக்கு 2-வது டெஸ்ட் போட்டி பொன்னான வாய்ப்பாக இருக்கும். அதை ஒவ்வொரு வீரரும் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம்.

இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். அதிலும் வெளிநாடுகளில் இந்திய அணி பிரமாதமாக ஆடுகிறது. நாங்கள் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதை ஆய்வு செய்யவும், நல்ல அடையாளத்தைத் தரும் ஆண்டாக வரும் புத்தாண்டு அமையும்.

அதிகமான கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் விளையாடி, வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் திறனுடனும் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு வந்து அந்த அணியை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சிறப்பான அனுபவம். இது எங்களுக்கு 2-வது மிகச்சிறந்த வெற்றி. முதலில் காபாவில் வெற்றி பெற்றோம். இப்போது செஞ்சூரியனில் வெற்றி பெற்றிருக்கிறோம். நிச்சயம் இந்தத் தொடரை வெல்வோம் என நம்புகிறேன்''.

இவ்வாறு கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x